Last Updated:
மக்கள் குடைகளைப் பிடித்தபடி தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதே திடீரென ஒட்டுமொத்த மலைச்சரிவும் சரிந்து கீழே விழுந்தது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள பிரம்மாண்ட சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆனக்கம்பொயில்-கல்லாடி’ சுரங்கப்பாதை சாலை திட்டப் பகுதிக்கு அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
நிலச்சரிவின் போது மலைச்சரிவின் ஒரு பகுதி அப்படியே சரிந்து, அங்கிருந்த சாலை மற்றும் வாகனங்களை அடித்துச் செல்லும் பயங்கரமான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இயற்கை பேரிடரில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நான்கு பேர் மண்ணிற்குள் புதைந்து காணாமல் போயுள்ளனர். படுகாயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், அப்பகுதி மக்கள் குடைகளைப் பிடித்தபடி தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதே திடீரென ஒட்டுமொத்த மலைச்சரிவும் சரிந்து கீழே விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு எரிபொருள் லாரி மற்றும் பல வாகனங்கள் இந்த ராட்சத நிலச்சரிவில் சிக்கி, சுமார் 100 அடி ஆழ பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக, அந்த லாரியில் இருந்த மூன்று பேர் இக்கட்டான சூழலில் இருந்து நொடிப்பொழுதில் தப்பித்து உயிர் பிழைத்தனர். இந்த நிலச்சரிவின் வீரியம் எந்தளவுக்கு இருந்தது என்றால், அங்கிருந்த ஒரு தேவாலயமும், அதற்கு அருகில் இருந்த ஒரு வீடும் மண்ணோடு மண்ணாக முழுமையாக புதைந்தன. அதிர்ஷ்டவசமாக, வீட்டில் இருந்தவர்கள் மெக்கா புனித யாத்திரை சென்றிருந்ததாலும், தேவாலயத்தில் யாரும் இல்லாததாலும் அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நிலச்சரிவு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
“வயநாட்டை உலுக்கிய நிலச்சரிவின் திகிலூட்டும் வீடியோ.. நொடியில் சரிந்த மலை.. அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்”


