கிள்ளான்:
கிள்ளான் துறைமுகத்திற்கு வந்திறங்கிய கப்பல் கொள்கலன் (Shipping Container) ஒன்றில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதில் ‘டின் தாது’ (Tin ore) இருப்பதாகப் பொய்ப் பிரகடனம் செய்யப்பட்டு, சட்டவிரோதமாக மின்னணுக் கழிவுகள் (E-waste) கடத்தி வரப்பட்டது அம்பலமாகியுள்ளது.
நேற்று காலை 7.05 மணியளவில், துறைமுகத்தை வந்தடைந்த அந்தக் கொள்கலன் டிரெய்லர் வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்தபோது இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (MCBA) தெரிவித்துள்ளது.
கிள்ளான் துறைமுக MCBA தளபதி டத்தோ நிக் எஸானி முகமது ஃபைசல் இது குறித்துக் கூறுகையில், கடந்த ஜூலை 6 அன்று வெளிநாட்டில் இருந்து வந்த அந்த கொள்கலனில் 17,237 கிலோகிராம் எடையுள்ள ‘டின் தாது’ இருப்பதாக கப்பல் போக்குவரத்து ஆவணங்களில் (Bill of lading) குறிப்பிடப்பட்டிருந்தது என்றார்.
தீ விபத்தைத் தொடர்ந்து, MCBA மற்றும் சுற்றுச்சூழல் துறை (DOE) அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையில், அந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்பதும், உள்ளே முழுவதும் சட்டவிரோத மின்னணுக் கழிவுகள் நிரப்பப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டுப்பாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்தது மற்றும் போலி விவரங்களைச் சமர்ப்பித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சுங்கத்துறை (Customs Department) தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டத்தோ நிக் எஸானி எச்சரித்துள்ளார்.



