Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி நிர்வாகத்தால் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார் சஞ்சு சாம்சன். தொடர்ந்து 3 போட்டிகளில் சொதப்பியதால், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியிலும் சஞ்சு சாம்சன் முதல் 3 போட்டிகளில் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தார்.
ஆனால் இந்த சீசனில் 14 இன்னிங்ஸ்களில் 2 சதங்களுடன் 477 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் முதல் 3 போட்டிகளில் சொதப்பிய போது நடந்த சம்பவங்கள் குறித்து சஞ்சு சாம்சன் பேசியுள்ளார். அதில் சஞ்சு சாம்சன், சிஎஸ்கே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான அணி. ஆனால், எனக்கு அந்த ட்ரெஸ்ஸிங் ரூம் சூழல் தான் ரொம்ப முக்கியமாக இருந்தது.

ஸ்டீபன் பிளெமிங், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி ஆகியோரின் அணுகுமுறை பிடித்திருந்தது. சிஎஸ்கே-வுக்காக விளையாடிய முதல் 3 போட்டிகளில் நான் ரன் ஏதும் எடுக்காமல் மோசமாக ஆட்டமிழந்தேன். ஆனால், நிர்வாகமோ அல்லது சீனியர் வீரர்களோ என் மீது காட்டிய அன்பில் 1% கூட மாற்றம் இல்லை. அந்த 3 போட்டிகளுக்குப் பிறகு தோனி என்னிடம் வந்து, ‘நீ பாதுகாப்பாக உணர்கிறாயா’ என்று கேட்டார்.
அதற்கு நான், ‘நான் பாதுகாப்பாக உணர்கிறேன் இருக்கேன்.. ஆனால்…’ என இழுத்தேன். உடனே அவர், ‘அந்த ஆனால் என்ற வார்த்தைக்குள் போகாதே’ என்றார். தோனி சொன்ன வார்த்தை மிகச்சிறியதாக இருந்தாலும், என் வாழ்க்கைக்கான மிகப்பெரிய பாடமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி நிர்வாகத்தை விடவும், சிஎஸ்கே அணுகுமுறை சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறியது குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், ஒரு அணியில் நீண்ட காலம் விளையாடும் போது, நம்மை யாரும் நீக்க முடியாது என்ற எண்ணம் வரும். ஆனால், எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் தான் இருக்கிறது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். ஒரு கட்டத்தில், சஞ்சு சாம்சன் இல்லாமலேயே விளையாட ராஜஸ்தான் அணி தயாராகிவிட்டது என்பதை உணர்ந்தேன்.
அதனால் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தேன். எனக்கு 2-3 ஆப்ஷன்கள் இருந்தன, ஆனால் தோனியின் தாக்கம் தான் என்னை சிஎஸ்கே நோக்கி ஈர்த்தது. தோனி காயத்தால் இந்த சீசனில் விளையாட முடியாததால் அவருடன் இணைந்து விளையாடும் என் கனவு இன்னும் அப்படியே இருக்கிறது. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

