பணிநீக்கம் செய்தது தவறு.. உண்மையை ஒப்புக்கொண்ட Meta.. பரபரப்பாக நடந்த டவுன்ஹால் கூட்டம்!
ஏஐ துறையின் அஸ்திவாரம் இந்த வாரம் சற்று ஆட்டம் கண்டது என்று தான் சொல்ல வேண்டும், ஆப்பிள் மற்றும் மெட்டா எடுத்த முடிவுகளை தாண்டி.. மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் நடந்த இந்நிறுவனத்தின் டவுன்ஹால் கூட்டம் ஒட்டுமொத்த ஏஐ துறைக்கும் மிகமுக்கியமான எச்சரிக்கையாக மாறியுள்ளது.
இக்கூட்டத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் பேசுகையில், நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்ட லாபத்தை கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ ஏஜெண்ட்கள் எதிர்பார்க்கப்பட்ட வகையில் வளரவில்லை என்றும், நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழு தவறாக கணித்துள்ளது என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த வருட துவகத்தில் மெட்டா நிறுவனம் சுமார் 10 சதவீத ஊழியர்கள் அதாவது 8000 பேரை பணிநீக்கம் செய்வதாகவும், 7000 ஊழியர்களை ஏஐ துறை சார்ந்த பணிகளில் ஈடுப்படுத்தவும் முடிவு செய்து மாற்றங்களை மேற்கொண்டது.
இதுதவறாக முடிந்தது மட்டும் அல்லாமல் ஏஐ உள்கட்டமைப்பு அதாவது டேட்டா சென்டர், கம்பியூட்டிங் பவர் ஆகியவற்றுக்காக 145 பில்லியன் டாலர் அளவிலான தொகையை 2026ல் மட்டும் மெட்டா முடிவு செய்துள்ளது. இது ஊழியர்கள் நலனுக்கு எதிராக இருப்பதாக ஏற்கனவே விமர்சனம் இருந்த நிலையில், தற்போது இதுவும் பலன் அளிக்காமல் உள்ளது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏஐ பிரிவை மேம்படுத்துவதற்காக ஓப்பன்ஏஐ, கூகுள், ஆந்திரோபிக் என பல முன்னணி ஏஐ நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளை பெரும் சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்தியது மெட்டா, இன்னும் சிலரை அவர்கள் வைத்திருந்த நிறுவனத்தை பெரும் தொகைக்கு வாங்கி பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் டவுன்ஹால் கூட்டத்தில் கடந்த 4 மாதத்தில் ஏஜென்டிங் ஏஐ டெவலப்மென்ட்-ல் மிகவும் மந்தமான வளர்ச்சி கண்டதாகவும், ஏஐ ஏஜெண்ட்கள் எதிர்பார்த்த அவுட்புட் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மெட்டா உருவாக்கி வரும் புதிய ஏஐ சேவை கிளாட் கோட்-க்கு இணையாக செயல்படும் என முதலில் கூறப்பட்டது, ஆனால் கடந்த 4 மாதங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் முடங்கி நிற்கிறது.
இதேவேளையில் மெட்டா நிறுவனத்தின் மவுஸ் டிராகிங் சாப்ட்வேர் மூலம் மிகவும் முக்கியமான தகவல்கள் கசிந்து வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தற்காலிகமாக இதன் செயல்பாட்டை நிறுத்துவதாக மெட்டா சிடிஓ Andrew Bosworth தெரிவித்துள்ளார்.
மெட்டா மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் பல முன்னணி நிறுவனங்கள் ஏஐ மூலம் செயல்திறன் பெரிய அளவில் உயர்ந்தாலும், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான செலவுகளை ஒப்பிடும் போது எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை என்றும், பல இடத்தில்ம மனித ஊழியர்களின் அவசியம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் போர்டு உட்பட பல நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை பணியில் சேர்க்க துவங்கியுள்ளது.

