கோலாலம்பூர்:
மலேசியாவிற்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் (Blacklisted) வைக்கப்பட்டிருந்தவர்கள் உட்பட 13 வெளிநாட்டினர், கிளாந்தான் எல்லை வழியாக நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
வங்காளதேசம், இந்தோனேசியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்களை, நேற்று காலை 5.10 மணி முதல் கிளாந்தான், கோத்தா பாருவில் உள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் கடல்சார் போலீசாருடன் (Marine Police) இணைந்து நடத்திய அதிரடி சோதனையின் போது குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 55 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் சிலர் ஏற்கனவே மலேசியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர்கள் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது என்று, குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் டத்தோ ஜகாரியா ஷாபான் வெளியிட்ட அறிக்கையில், “முதலாவது சோதனையில், பேருந்து முனையம் (Bus terminal) அருகே 8 வங்காளதேச ஆண்கள், 3 இந்தோனேசிய ஆண்கள் மற்றும் ஓர் இந்தோனேசியப் பெண் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதி ஒன்றின் அருகே நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.”
இச்சோதனையின் போது 4 வங்காளதேச கடப்பிதழ்கள் (Passports), 4 இந்தோனேசிய கடப்பிதழ்கள் மற்றும் அந்த வெளிநாட்டினரைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒரு புரோட்டான் பிரேவ் (Proton Preve) ரக காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரும் ‘1959/63 குடிநுழைவுச் சட்டம்’ பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c)-இன் கீழ் குற்றம் இழைத்ததாகச் சந்தேகிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காகக் குடிநுழைவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
The post கறுப்புப் பட்டியலில் இருந்தும் திருட்டுத்தனமாக நுழைவு: கிளாந்தான் எல்லையில் 13 வெளிநாட்டினர் அதிரடி கைது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

