Tamilnadu
oi-Vignesh Selvaraj
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஆடு திருடிய வழக்கில் கைதான வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்ற முதன்மை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் ஆடுகளை திருடிச் சென்றதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஷேக் சுல்தான் மீது வாணியம்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இநிந்லையில், அவர் திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அரசு வழக்கறிஞர் பதவிகளை பெற தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

அதோடு, பலரும், தவெக நிர்வாகிகளிடம் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பெற முயல்வதாக கூறப்படுகிறது. ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லஞ்சம், ஊழலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறி வரும் நிலையில் வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூரில் ஆடு திருடிய வழக்கில் கைதான வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்ற முதன்மை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலை (65). இவரது கணவர் சிங்காரவேல் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவரது இரண்டு மகன்களும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார். அவரும் திருமணமான நிலையில், அவரது கணவருடன் வசித்து வருகிறார். எனவே, அஞ்சலை தனியாகவே வசித்து வந்துள்ளார். வருமானத்திற்காக ஆடு வளர்ப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அஞ்சலை, 8 ஆடுகளை வளர்த்து வந்த நிலையில் அம்பலால் தெருவில் வசிக்கும் வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவரது வீட்டில் ஆடு மற்றும் மாடுகளின் கொட்டகையை சுத்தம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் அந்த வேலையில் இருந்து நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அஞ்சலை வளர்த்து வந்த ஆடு ஒன்று காணாமல் போயுள்ளது. இதையடுத்து, அஞ்சலை வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், வழக்கறிஞர் ஷேக் சுல்தான், திருமலை என்பவருடன் சேர்ந்து, காரில் வந்து அஞ்சலையின் ஆட்டை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்கறிஞர் சுல்தான் மீது, வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஷேக் சுல்தானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற ஷேக் சுல்தான் விரைவிலேயே சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் தான், ஷேக் சுல்தான் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆடு திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர் தற்போது அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

