Last Updated:
இந்த தாக்குதல் உக்ரைனின் ராணுவ மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட பதிலடித் தாக்குதல் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யா ஒரே இரவில் 74 ஏவுகணைகள், 496 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 48 ஏவுகணைகளையும் 476 ட்ரோன்களையும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. எஞ்சிய 25 அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளும் 12 ட்ரோன்களும் நகரின் முக்கியப் பகுதிகளில் விழுந்து வெடித்ததாகவும் உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
குறிப்பாக கீவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 6 தளங்கள் இடிந்து விழுந்தன. நகரம் முழுவதும் சுமார் 33 இடங்களில் கடுமையான சேதங்கள் பதிவாகின. தாக்குதலுக்கு பயந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நகரின் மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த தாக்குதலால் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அயர்லாந்து நாட்டிற்கு மேற்கொண்டிருந்த பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசரமாக நாடு திரும்பினார். ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு மறுத்து, போரைத் தீவிரப்படுத்துவதிலேயே குறியாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், இந்த தாக்குதல் உக்ரைனின் ராணுவ மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பதிலடித் தாக்குதல் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


