புத்ராஜெயா: மலேசியாவில் உள்ள குடும்பங்களில் ஆண்டுதோறும் ஒரு நபருக்கு 31.9 கிலோ முதல் 97.3 கிலோ வரை உணவு வீணாகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது என தலைமைப் புள்ளியியலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமது உசிர் மஹிதின் கூறினார். தேசிய குடும்பக் குறிகாட்டிகள் கணக்கெடுப்பு (NHIS) 2025-இன் அடிப்படையில், சமைக்கப்படாத உணவை விட பதப்படுத்தப்பட்ட அல்லது சமைத்த உணவுகளே அதிக அளவில் வீணாகின்றன என்றும், சமைக்கப்படாத உணவை 88.7 சதவீத குடும்பங்கள் தூக்கி எறிந்துள்ள நிலையில், பதப்படுத்தப்பட்ட அல்லது சமைத்த உணவை 94.1 விழுக்காடு குடும்பங்கள் தூக்கி எறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
உணவு தயாரிக்கப்பட்ட பின்னரே அதிக அளவு உணவு வீணாகிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இது, உணவுத் திட்டமிடல், உணவு தயாரித்தல் மற்றும் மீதமுள்ள உணவைக் கையாளுதல் ஆகியவற்றில் சிறந்த குடும்பப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் வியாழக்கிழமை (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். 79.3 விழுக்காடு குடும்பங்கள் உணவை மற்ற வீட்டுக் கழிவுகளுடன் சேர்த்து அப்புறப்படுத்துவதாகவும், அதே சமயம் 20.7 சதவீதக் குடும்பங்கள் மட்டுமே உணவுக் கழிவுகளைத் தனியாகப் பிரித்து அப்புறப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
குடும்பங்களிடையே உணவுக் கழிவுகளைத் தனியாகப் பிரித்து அப்புறப்படுத்தும் வழக்கம் இன்னும் பரவலாக இல்லை என்பதை இது காட்டுவதாகவும், இதனால் மக்கும் கழிவு மேலாண்மையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், குப்பைக் கிடங்குகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இது ஒரு சவாலாக அமைகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
உணவு வகைகளின்படி பார்த்தால், சமைக்கப்படாத உணவுகளில் காய்கறிகள் 29.1 விழுக்காட்டுடன் அதிக அளவில் வீணடிக்கப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து பழங்கள் (22.4 விழுக்காடு) மற்றும் மீன் அல்லது கடல் உணவுகள் (15 விழுக்காடு) வீணடிக்கப்படுவதாகவும் முகமது உசிர் கூறினார். பதப்படுத்தப்பட்ட அல்லது சமைத்த உணவைப் பொறுத்தவரை, அரிசி (16.7 விழுக்காடு ) அதிகபட்ச வீணடிப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து காய்கறிகள் (15.8 விழுக்காடு) மற்றும் வெளியில் இருந்து வாங்கப்பட்ட உணவு (13.8 விழுக்காடு) வீணடிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.



