இதென்ன ரஷ்யாவுக்கு வந்த சோதனை..! உலகிற்கே பெட்ரோல் கொடுத்த நாடுக்கே பெட்ரோல் இல்லை..!
உலகிற்கே பெட்ரோல் தயாரிப்புக்காக கச்சா எண்ணெயை வழங்கி வந்த ரஷ்யாவில் தற்போது கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியது முதலே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தான் கச்சா எண்ணெய் வாங்குகிறது. குறிப்பாக ரஷ்யா இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கியது.
ஈரான் போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் வழங்கி இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியது ரஷ்யா தான். அப்படிப்பட்ட ரஷ்யாவுக்கே பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்தியாவிடம் இருந்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே 5 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள உக்ரைன் ராணுவம் சமீபத்தில் ரஷ்யாவிற்குள் புகுந்து அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட பெரிய பெட்ரோல், டீசல் தயாரிக்கும் தொழிற்சாலைகளை குண்டு வீசி தகர்த்துள்ளது. இதனால், உலகிற்கே பெட்ரோல் கொடுக்கும் வல்லமை படைத்த ரஷ்யாவில் இப்போது வரலாறு காணாத பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல் போடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிபர் புதின் தலைமையிலான அரசு அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் உதவியை நாட்டியுள்ளது.
ரஷ்யாவில் தற்போது எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதால் நாள் ஒன்றுக்கு சுமார் 1,10,000 டன் பெட்ரோல் தேவைப்படுகிறது. உள்நாட்டில் பெட்ரோல் உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டதால் பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய பெலாரஸ் உள்ளிட்ட தனது அண்டை நாடுகளிடம் இருந்தும், இந்தியாவிடம் இருந்தும் பெட்ரோல் இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது ரஷ்யா.
இந்தியாவிடம் இருந்து ஏற்கனவே 60,000 மெட்ரிக் டன் பெட்ரோல் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதகவும் ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் டன்கள் பெட்ரோல் அனுப்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே , ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில், ரஷ்யா கச்சா எண்ணெயின் பங்கு 50% அதிகமாக இருந்துள்ளது. ஜூன் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 2.70 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இந்தியாவிற்கு வந்துள்ளது.

