India
oi-Vigneshkumar
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளில் நடந்த முறைகேடு விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. ஆரம்பத்தில் இது வழக்கமான அரசியல் குற்றச்சாட்டாக தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் இது பூதாகரமாக வெடித்து வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ராமர் கோயில் விவகாரம் மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது. அங்கு பல கோடி பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த பணத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஆரம்பத்தில் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறிய சலசலப்பாகத் தொடங்கியது. அகலேஷ் யாதவ் இதை எழுப்ப, ராமர் கோயில் அறக்கட்டளை பதில் கொடுத்தது. மாநில பாஜக அரசும் இதில் முறைகேடு இல்லை என சொன்னது.

பகீர் தகவல்கள்
ஆனால், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியவுடன் நிலைமை மொத்தமாக மாறியது. விசாரணையில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைக்கிறது. கோடி கணக்கான பக்தர்களின் நம்பிக்கையோடு தொடர்புடைய இந்த விவகாரம் இப்போது யோகி அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இது வரவிருக்கும் உபி தேர்தல் களத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லப்படுகிறது.
மெகா முறைகேடு
கோயில் வளாகத்தில் பக்தர்களின் காணிக்கைகளைக் கையாள்வதில் முறைகேடுகள் நடப்பதாக.. ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முன்னாள் அதிகாரி மகிபால் சிங் என்பவரே இந்த புகாரை முதன்முதலில் எழுப்பினார். பக்தர்கள் வழங்கிய காணிக்கையில் சுமார் 5 கோடி முதல் 7 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பணம் மட்டுமின்றி, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட சுமார் 1,250 மதிப்புமிக்க செங்கற்களும் கூட மாயமாகிவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மொரிஷியஸிலிருந்து அனுப்பப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கல் மற்றும் மும்பை தொழிலதிபர் வழங்கிய வைரக்கல் ஆகியவையும் மாயமாகியுள்ளது.
அரசியல் கட்சிகள்
இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பக்தர்களின் நம்பிக்கையே முதன்மையானது என்றும் ராமர் காணிக்கை முறைகேடு செய்யப்பட்டது சனாதன தர்மத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்கவும் நடவடிக்கை தேவை என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்தப் பிரச்சனை குறித்து தனக்குப் பல விஷயங்கள் தெரியும் என்றும் ஆனால் உண்மையைச் சொன்னால் தனக்குப் புதிய சிக்கல் ஏற்படும் என்றும் முன்னாள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியிருப்பது சந்தேகங்களை மேலும் அதிகரித்துள்ளது. அதேநேரம் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தரப்பு கூறி நிலைமை சமாளிக்கவே முயல்கிறது..
பாஜகவுக்கு பின்னடைவு
ராமர் கோயில் என்பது உத்தரப் பிரதேசத்தில் வெறும் மத நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல.. அது பாஜகவின் மிக முக்கியமான அரசியல் மற்றும் தேர்தல் பிரச்சாரமாக இருந்து வருகிறது. தேசியவாதத்தையும் ஆன்மிகத்தையும் ஒருசேர முன்னிறுத்தித் தேர்தல்களை எதிர்கொள்ளும் பாஜகவிற்கு ராமர் கோயில் முறைகேடு என்பது தலைவலி தான். அதுவும் சரியாகத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பு இந்த ஊழல் புகார் எழுந்துள்ளது பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ராமர் கோயில் கட்டியதையே தங்களின் மிக பெரிய சாதனையாகக் கூறி பாஜக வாக்கு சேகரித்து வருகிறது. இதுவே 2027 உபி தேர்தலுக்கும் பாஜகவின் திட்டமாக இருந்தது. அப்படியிருக்கும்போது கோயில் முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது பாஜகவுக்கு பெரிய பின்னடைவையே ஏற்படுத்தும் என தெரிகிறது.
தேர்தலை பாதிக்கும்
பொதுவாகவே அரசு துறைகள் என்றால் ஊழல் புகார்கள் இருக்க தான் செய்யும் எனச் சிலர் சமாளிக்க முயலலாம் ஆனால் அரசுத் துறைகளில் நடக்கும் வழக்கமான ஊழல் புகார்களைப் போல இது இல்லை.. இது கோடிக் கணக்கான பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளுடன் நேரடியாகத் தொடர்புடையது. இதனால் இந்துத்துவா வாக்குகளில் பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன. எனவே, இந்த விசாரணையின் முடிவைப் பொறுத்தே, 2027 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்புகள் அமையும். முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அது எதிர்க்கட்சிகளுக்குப் பலமான அரசியல் ஆயுதமாக மாறும்.. இது பாஜகவுக்கு மிக பெரிய சிக்கலையே தரும்



