கோலாலம்பூர்:
சபா, புத்தாத்தான் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கொடூர விபத்தில், மற்றொரு வாகனத்தால் மோதப்பட்டு மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் 19 வயது உள்ளூர் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், பாண்டி ஜாமே என்ற அந்த இளைஞர் கடுமையான உடல் காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக புத்தாத்தான் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் முஸ்ரான் ஜாப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிகாலை 4.45 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், முற்றிலும் தீக்கிரையான மோட்டார் சைக்கிளையும், உயிரிழந்த நிலையில் இருந்த இளைஞரின் உடலையும் மீட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய மற்றொரு வாகனம் அங்கிருந்து தப்பியோடியதாக நம்பப்படும் வேளையில், உயிரிழந்த இளைஞரின் உடல் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



