International
oi-Nantha Kumar R
மாஸ்கோ: நம் நாட்டுக்கு அதிகப்படியான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வந்த ரஷ்யாவின் நிலைமை தற்போது மோசமாகி உள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தற்போது ரஷ்யா நம் நாட்டிடம் பெட்ரோல் வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளது. உலகில் கச்சா எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கும் ரஷ்யாவின் இந்த நிலைமைக்கு என்ன காரணம்? என்று இங்கு பார்க்கலாம்.
ரஷ்யா.. நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடாகும். இன்னும் சொல்லப்போனால் நம் நாட்டுக்கு அதிகப்படியான கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் அள்ளி தரும் நாடாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 38 சதவீதத்துக்கு மேலாக ரஷ்யா தான் பூர்த்தி செய்தது. டிரம்ப் அமெரிக்கா அதிபரான பிறகு தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நாம் குறைத்தோம்.

இருப்பினும் கூட ஈரான் – அமெரிக்கா மோதல் காரணமாக மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியால் மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியது. கடந்த மே மாதத்தில் மட்டும் நம் நாடு மொத்த பயன்பாட்டில் 36.5 சதவீத கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்தது. இதன் அளவு ஜுன் மாதத்தில் கூடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இப்படி நம் நாட்டின் பெட்ரோல், டீசல் தேவைக்கான கச்சா எண்ணெய் தந்து உதவிய ரஷ்யாவின் நிலைமை தற்போது மோசமாகி உள்ளது. ஏனென்றால் ரஷ்யாவிலேயே தற்போது பெட்ரோல் தட்டுப்பாடு கடுமையாகி உள்ளது. இதனால் நம் நாட்டிடம் இருந்து பெட்ரோல் வாங்கி ரஷ்யா பயன்படுத்த தொடங்கி உள்ளது. உலகில் கச்சா எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்கு இந்த நிலை வந்தது எப்படி? என்பதுபற்றி இங்கு பார்க்கலாம்.
இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் – ரஷ்யா போர் தான். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இன்னும் போர் முடியவில்லை. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபகாலமாக உக்ரைன் ட்ரோன் மூலமாக ரஷ்யாவின் எரிசக்தி துறை சார்ந்த உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் தற்போது ரஷ்யாவில் கடுமையாக பெட்ரோல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பல பிராந்தியங்களில் பெட்ரோல் கிடைக்காமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பெட்ரோல் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யா நம் நாட்டிடம் இருந்து வாங்க தொடங்கி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக சுமார் 60 ஆயிரம் பெட்ரோல் டன் முதல் 60 ஆயிரம் மெட்ரிக் டன் வரையிலான பெட்ரோல் நம்நாட்டிடம் இருந்து சரக்கு கப்பலில் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி பிற நட்பு நாடுகளிடம் இருந்தும் பெட்ரோல் தரும்படி ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்திவ ருகிறது. ஏனென்றால் கோடைக்காலத்தில் ரஷ்யாவை எடுத்து கொண்டால் ஒரு நாளைக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் பயன்பாடு உள்ளது. இதனால் பிற நாடுகளின் உதவியையும் ரஷ்யாகேட்டுள்ளது. அந்த வகையில் நட்பு நாடான பெலாரஸ், ரஷ்யயாவிற்கு உதவ முன்வந்துள்ளது. ஜுன் முதல் பாதியில் மட்டும் பெலாரஸ் 70 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான பெட்ரோலை ரஷ்யாவிற்கு வழங்கி உள்ளது.

