அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தையே கிடையாது: திடீரென டிவிஸ்ட் அடிக்கும் ஈரான்..!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை இன்று கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானின் பேச்சுவார்த்தைக் குழுக்கள் கத்தாரின் தலைநகரான தோஹாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளன. ஆனால் திடீரென ஈரான் தரப்பு அமெரிக்காவுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என அறிவித்துள்ளது.
ஈரான் மீது கடந்த மார்ச் 28-ஆம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக போர் நீடித்தது. ஈரான் அண்டை நாடுகளில் இருந்து அமெரிக்க படை தளங்கள் மீதும் இஸ்ரேல் மீதும் கடுமையான தாக்குதலை தொடர்ந்தது. இந்த சூழலில் தான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு போனது. கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலைகள் தாறுமாறாக உயர்வு கண்டன.

ஈரான் போரை எப்படியாவது நிறுத்தியாக வேண்டும் என பல்வேறு நாடுகளும் தொடர்ந்து அழுத்தம் தந்தது. இதனை அடுத்து அமெரிக்காவும் ஈரானும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 14 அம்சங்கள் கொண்ட இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தொடர்பாக கத்தார் தலைநகர் தோஹாவில் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
இந்த சூழலில் தான் கடந்த வாரம் இறுதியில் அமெரிக்காவும் ஈரானும் திடீரென பரஸ்பரம் தாக்குதல் நடத்திக் கொண்டன. இதனால் மீண்டும் இரு நாடுகளும் போரை தொடங்குகின்றனவோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டது. இதற்கிடையே அமெரிக்கா அதிபர் டிரம்ப் தோஹாவில் ஈரான் உடனான பேச்சுவார்த்தை தொடரும் என அறிவித்தார். தன்னுடைய மருமகன் ஜேரட் குஷ்னர் மற்றும் மூத்த அதிகாரி ஸ்டீவ் வித்காப் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தை குழுவினை தோஹா அனுப்பி வைத்திருக்கிறார்.
ஈரானை சேர்ந்த பேச்சுவார்த்தை குழுவும் தோஹாவில் இருக்கிறது. ஆனால் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்றால் தெரியவில்லை. ஏனெனில் ஈரான் தரப்பு திடீரென அமெரிக்காவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடுபடப் போவதில்லை அறிவித்திருக்கிறது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் அமெரிக்காவுடன் எந்த பேச்சு வார்த்தைக்கும் நாங்கள் தயாராக இல்லை , பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்படி எந்த வகையிலும் யாராலும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என தெரிவித்திருக்கிறார். டிரம்போ ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தோஹாவில் நடக்கும் பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என கூறிய நிலையில் ஈரான் இப்படி அறிவித்திருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜூன் 17-ஆம் தேதி அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே 14 அம்சம் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் 60 நாட்களுக்குள் அதனை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது ஈரான் அதில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்து புதிய ட்விஸ்ட் தந்திருக்கிறது.இருந்தாலும் மீண்டும் ஒரு போர் என்பது உலக பொருளாதராத்தையே பாதிக்கும் என்பதால் எப்படியாவது நட்பு நாடுகள் சமாதானப்படுத்தி இரு தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

