ஸ்கெட்ச் போட்டு தூக்கிய குஜராத் வைர வியாபாரிகள்.. ஒடிசா அரசுக்கு இப்படியொரு வாய்ப்பா?
இந்தியாவின் மிகப்பெரிய வைர வர்த்தகத்தை கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தின் 3 முக்கிய நிறுவனங்கள் திடீரென ஒடிசா-வில் தனது வைர வியாபார வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. பொதுவாக வர்த்தக விரிவாக்கம் என்றால் தற்போது இருக்கும் இடத்திலோ அல்லது அண்டை மாநிலத்திலோ செய்வது வழக்கம். ஆனால் குஜராத் வைர வியாபாரிகள் மேற்கில் இருந்து கிழக்கு பக்கம் மொத்தமாக திரும்பியுள்ளனர்.
அதுவும் ஒடிசாவில் வைர வியாபாரத்திற்கான அடித்தளம் இல்லை, ஏன் கொள்கை கூட இல்லை. இப்படியிருக்கும் போது ஏன் குஜராத் வியாபாரிகள் சுமார் 10000 கோடி ரூபாய் முதலீட்டை ஓடிசாவில் செய்ய வேண்டும்..? மிகப்பெரிய காரணம் இருக்கு.\

முதல் முறையாக..
ஒடிசா அரசு சமீபக காலத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு பெரிய அளவில் ஒப்புதல் அளித்து வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக லேப் குரோன் டைமண்ட் தயாரிப்பு திட்டங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒடிசா மாநிலம் உலகளாவிய வைர உற்பத்தி துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது.
ஒடிசா அரசின் உயர்மட்ட அனுமதிக் குழு (HLCA), கோர்தா மாவட்டத்தில் மூன்று லேப் குரோன் டைமண்ட் தயாரிப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூன்று திட்டங்களும் சூரத் நகரைச் சேர்ந்த நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டவை.
Kira Diam LLP நிறுவனம் ரூ.7,000 கோடி முதலீட்டில் லேப் குரோன் டைமண்ட் தயாரிக்கும் ஆலையை அமைக்க உள்ளது. இதன் மூலம் 5,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல் Anjali Labtech ரூ.1,617.5 கோடி முதலீட்டில் 2,000 வேலைகளையும், Grow Magnificent ரூ.1,200 கோடி முதலீட்டில் 1,000 வேலைகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து லேப் குரோன் டைமண்ட் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ரூ.9,817 கோடி முதலீட்டையும், 8,100 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதான் முக்கிய பிரச்சனை
கடந்த 10 ஆண்டுகளில் லேப் குரோன் வைரங்களின் விலை சுமார் 85% வரை குறைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் இதன் விலை 26% சரிந்துள்ளது. இதைவிட முக்கியமாக அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் 1 முதல் 3 கேரட் வரையிலான வைரங்களின் விலை 40% வரை குறைந்துள்ளது.
இந்த விலை சரிவால், வர்த்தகத்தையும், லாபத்தையும் ஈடுக்கட்ட உற்பத்தி செலவைக் குறைப்பதே சூரத் நிறுவனங்களின் முக்கிய இலக்காக மாறியுள்ளது. லேப் குரோன் வைர உற்பத்தியில் மின்சாரம் முக்கிய செலவாக இருப்பதால், மலிவான மின்சாரம் கிடைக்கும் இடங்களை நோக்கி குஜராத் நிறுவனங்கள் நகர்ந்து வருகின்றன.
ஒடிசாவின் மின்சார சலுகை
ஒடிசாவில் இதுவரை லேப் குரோன் டைமண்ட் துறைக்கு என்று தனி கொள்கை இல்லை. ஆனாலும் இந்த 10000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் 2022-ஆம் ஆண்டு தொழில் கொள்கையின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்கையின்படி, முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சார பயன்பாட்டுக்கு ரூ.2 சலுகை, மின்சார வரி விலக்கு, 30% மூலதன மானியம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த குறைந்த விலை மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளவே குஜராத் நிறுவனங்கள் ஓடிசாவுக்கு படையெடுத்துள்ளது.
இதன் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு சூரத் நிறுவனங்கள் தங்களுடைய லேப் க்ரோன் டைமெண்ட் தொழில்நுட்ப அறிவையும் அனுபவத்தையும் கொண்டு வருகின்றன. ஒடிசா மாநிலம் மலிவான மின்சாரத்தையும், அரசு சலுகைகளையும் வழங்குகிறது.
