Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ‘கில்லி’ சரத்குமாரின் சர்ச்சை வீடியோ விவகாரம், தற்போது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளது. “அது போதைப்பொருள் அல்ல, என் குழந்தைக்கு கொடுத்த மாத்திரை” என்று அமைச்சர் விளக்கம் அளித்த நிலையில், அதனை ஏற்க மறுத்து இன்று தமிழகம் முழுவதும் திமுக நடத்திய அதிரடி போராட்டங்கள், ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளன.
கடந்த வாரம் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக முதல்வர் விஜய் தலைமையில் ஒரு பிரம்மாண்ட மாரத்தான் பேரணி நடைபெற்றது. பொதுமக்களிடையே இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த சூழலில், அதற்கு நேர்மாறாக சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது எடுக்கப்பட்ட அந்த பழைய வீடியோவில், அமைச்சர் கில்லி சரத் தனது மொபைல் திரையில் ஒரு வெள்ளை நிற பவுடரை ஏடிஎம் கார்டு கொண்டு நேர்த்தியாக கோடு கிழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் இந்த வீடியோவை ‘தக் லைஃப்’ (Thug Life) என்ற டேக்குகளுடன் பகிர்ந்து, தவெக அரசுக்கு எதிராகவும், முதல்வரின் போதை ஒழிப்பு கொள்கைக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இது கட்சிக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது.
ஐபிஎல் ஆட்டத்தின் போது விவிஐபி பாக்ஸில் அமர்ந்து கொண்டு கில்லி சரத் , வங்கி கார்டு மூலம் ஒரு வெள்ளை நிறப்பொடியை மொபைல் திரையில் நசுக்கும் வீடியோ வெளியானதில் இருந்தே, திமுகவின் மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி மிக தீவிரமான களப்பணியில் இறங்கின. அதன் உச்சகட்டமாக, இன்று சென்னை எக்மோர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் காவல்துறை அனுமதியை மீறி நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டம், ஒடிசா முதல் டெல்லி வரை அரசியல் வட்டார உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
களத்தில் நின்ற தலைவர்கள்; மேயர் பிரியா, சேகர்பாபு அதிரடி கைது!
சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் திமுகவின் மிக முக்கிய முகங்களான முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ஆகியோர் நேரடியாக களமிறங்கினர். அமைச்சர் ‘கில்லி’ சரத்குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், முதல்வர் விஜய் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷங்கள் விண்ணை பிளந்தன.
காவல்துறை இடுப்புயர தடுப்புகளை அமைத்து தடுத்த போதிலும், திமுகவினர் அதனை உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உட்பட நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்து குண்டுகட்டாக வாகனங்களில் ஏற்றியது. இதேபோல் தமிழகத்தின் திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர் என அனைத்து முக்கிய மாவட்டங்களிலும் திமுகவின் மூத்த தலைவர்கள் தலைமையில் போராட்டங்கள் வெடித்து, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஜய் முதன்முறையாக பார்க்கும் ‘பழைய திமுக’!
சமீபகாலமாக தேர்தல் வியூகங்கள் மற்றும் அமைதியான பிரச்சார பாணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த திமுக, இன்று மீண்டும் தனது பழைய ‘போராட்டக் குணமிக்க’ அசல் பாணிக்கு திரும்பியிருக்கிறது. அண்ணாதுரை, கருணாநிதி காலத்து திமுக என்பது, எதிர்க்கட்சியாக இருக்கும்போது வீதிக்கு வந்து, ரத்தமும் சதையுமாக நின்று, அரசாங்கத்தையே அதிர வைக்கும் போராட்டங்களை நடத்தும். அந்த ‘Tooth and Nail’ என்று சொல்லப்படும் நகமும் சதையுமான ஆக்ரோஷ போராட்டக் குணத்தை, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு இப்போதுதான் முதன்முறையாக நேருக்கு நேர் பார்க்கிறது.
இந்த ஆக்ரோஷமான வீதிப் போராட்டங்கள், தவெகவின் ஐடி விங் மற்றும் நிர்வாகிகளுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கின்றன.. தேர்தல் முடிந்துவிட்டாலும், களத்தில் திமுகவை எதிர்கொள்வது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல!
தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு புதிய அரசாங்கம் அமைந்த மிகக்குறுகிய காலத்திலேயே, எதிர்க்கட்சி இந்த அளவுக்கு மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தை கையில் எடுத்திருப்பது இதுவே முதல்முறை. இந்த கைது நடவடிக்கைகள் திமுக தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை பாய்ச்சியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

