Tamilnadu
oi-Rajkumar R
சென்னை:2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களும், கட்சி தாவல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தங்களது கசீ தாவி வரும் நிலையில், தற்போது அறிவாலய வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் நபராக ஆளூர் ஷாநவாஸ் தான் இருக்கிறார். திமுகவில் சேர துணை பொதுச்செயலாளர் பதவியை ஆளூர் ஷாநவாஸ் எதிர்பார்த்த நிலையில், அதற்கு துரைமுருகன் குறுக்கே நிற்கிறார். இதனால் தனிகட்சி ஆரம்ப்த்து திமுக்வுக்கு ஆதரவு தரலாம் என்ற மனநிலையில் இருக்கிறாராம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த ஆளூர் ஷாநவாஸ், தொலைக்காட்சி விவாதங்கள், பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் என கட்சியின் நிலைப்பாட்டை வலுவாக முன்வைத்து வந்தவர்.
கட்சியின் வளர்ச்சியிலும், கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியவர் என்ற அடையாளத்தை பெற்றிருந்தார். ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

ஆளூர் ஷாநவாஸ்
பின்னர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டாலும், அதனால் முழுமையான திருப்தி அவருக்கு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான பனையூர் பாபு திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் திமுகவை நோக்கி நகரலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அந்த பட்டியலில் ஆளூர் ஷாநவாஸ் பெயரும் இடம் பெற்றிருந்தது.
திமுக
இதையடுத்து, திமுக தரப்புடன் அவரது ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவாலய வட்டாரத்தில் தகவல்கள் பரவின. குறிப்பாக, திமுகவில் இஸ்லாமிய சமூகத்திற்கு முக்கிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆளூர் ஷாநவாஸ் தரப்பு முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், திமுகவில் இணைந்தால் துணைப் பொதுச்செயலாளர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துரைமுருகன்
தற்போது அறிவாலய வட்டாரத்தில் பரவி வரும் தகவலின்படி, இந்த கோரிக்கை குறித்து திமுக தலைமை ஆலோசனையில் ஈடுபடுள்ளது. அப்போது, கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன், வெளிக்கட்சியில் இருந்து நேரடியாக வரும் ஒருவருக்கு உடனடியாக துணைப் பொதுச்செயலாளர் போன்ற உயரிய பொறுப்பை வழங்குவது சரியான நடைமுறையாக இருக்காது என்ற கருத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
மு.க. ஸ்டாலின்
மேலும், திமுகவிலேயே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மூத்த இஸ்லாமிய நிர்வாகிகள் இருக்கும் நிலையில், அவர்களை புறக்கணித்து வெளிக்கட்சியிலிருந்து வருபவருக்கு அத்தகைய பொறுப்பு வழங்குவது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த கருத்தை முக ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டதாகவும், இதனால் ஆளூர் ஷாநவாஸ் திமுகவில் இணையும் நிகழ்வு தள்ளிப் போனதாம்.
தனிக் கட்சி
இந்த சூழலில், ஆளூர் ஷாநவாஸ் உடனடியாக எந்த கட்சியிலும் இணையாமல், முதலில் தனியாக ஒரு அரசியல் கட்சியை உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அமைப்பு பின்னர் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்மூலம் தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தையும், ஆதரவாளர் வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டு பின்னர் கூட்டணியில் இணையலாம் என்ற வியூகத்தில் ஆளூர் உள்ளாராம்.



