Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது திமுகவின் ஊடகத் தொடர்பு பிரிவின் துணைத் தலைவராக இருந்த அரசகுமாரின் கைது நடவடிக்கை. தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை வெறும் ஆரம்பம் தான் என்றும், தமிழக அரசியல் களத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அடுத்தடுத்து பல திமுக பிரமுகர்களை சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்க வியூகம் வகுத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் முதல் புள்ளியாகவே இந்த கைது நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
என்ன நடந்தது? ரூ. 100 கோடி மோசடிப் பின்னணி
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளை, நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கும், அவற்றுக்கான தடையின்மை சான்றிதழ் (NOC) மற்றும் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கும் பெரும் தொகை கைமாறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த அரசகுமார், இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டு பல பள்ளி நிர்வாகங்களை ஏமாற்றியதாகப் புகார் எழுந்துள்ளது.

பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் அங்கீகாரப் பணிகளுக்காக, பள்ளி கட்டிடத்தின் பரப்பளவைக் கணக்கிட்டு, ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் வரை அவர் வசூலித்ததாக அதிரடி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்வாறாக ஒட்டுமொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய் வரை தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து அவர் முறைகேடாகத் திரட்டியதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட கால லஞ்சப் புகார்: தமிழகத்தில் கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களிலேயே தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் NOC வழங்குவதில் பெரிய அளவில் லஞ்சப் புகார்கள் இருந்து வந்துள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் யாரும் இதுவரை எழுத்துப்பூர்வமாக முறையான புகார்களை அளிக்க முன்வராததால், இந்த முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வந்தன.
அடுத்தடுத்து பாயும் கைது நடவடிக்கைகள்?
தற்போது அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த 100 கோடி ரூபாய் மோசடிப் பின்னணியில் அரசகுமார் மட்டுமின்றி, ஆளுங்கட்சியைச் சேர்ந்த மேலும் சில முக்கியப் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவருக்கும் இந்த ஊழலில் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், விசாரணை வளையம் அவரை நோக்கியும் திரும்பியுள்ளது. இதனால் அடுத்தடுத்து பல முக்கிய திமுக பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
விஜய்யின் அரசியல் வியூகம்
மறுபுறம், இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாக கவனித்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுங்கட்சியின் இத்தகைய ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்று வரும் விஜய், திமுக தலைவர்களின் ஊழல் பட்டியல்களை வெளிக்கொண்டு வந்து, அவர்கள் மீது சட்டப்படியான கைது நடவடிக்கைகளை உறுதி செய்யத் தேவையான அரசியல் மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்களை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அரசகுமார் கைது என்பது அதன் முதல் கட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்த முறைகேடுகளை ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்று, அவர்கள் மீது கடுமையான ஆக்ஷன் எடுக்க விஜய் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

