புத்ராஜெயா:
2026 ஜூன் 22 ஆம் நாள் ‘பூடி மடானி டீசல்’ (BUDI Diesel) இலக்குமுறை மானிய முறைமைக்கு மாறுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்து, தகுதியுள்ள மலேசியர்கள் இந்த புதிய அணுகுமுறையின் மூலம் சிறந்த பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக மடானி அரசாங்கம் பொதுமக்கள், சிறு வணிகர்கள், பங்குதாரர்கள், அமலாக்க முகமைகளுடன் பல விவாத அமர்வுகளை நடத்தியுள்ளது.
டீசல் வாகனங்கள் உண்மையான பயனர்களால் பயன்படுத்தப்பட்டாலும், அவை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் இன்னும் பதிவு செய்யப்பட்டுள்ள சூழல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், மேலும் மேல்முறையீடுகளை மடானி அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளது.
இதற்கேற்ப, தீபகற்ப மலேசியாவில் தகுதியுள்ள பயனாளிகளுக்கான ‘பூடி டீசல்’ ஆரம்பகட்ட அணுகல் 2026 ஜூன் 27 முதல் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், இந்த முறைமை சீராக மாறுவதை உறுதி செய்வதற்காக சில மேம்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தும் முறைகேடுகளைத் தடுப்பதோடு, தகுதியுள்ள மலேசியர்களுக்கு டீசல் மானியம் சென்றடைவதை உறுதி செய்வதே ‘பூடி டீசல்’ முறைமைக்கான மாற்றத்தின் நோக்கமாகும்.
மக்களின் கருத்துகளையும் மேல்முறையீடுகளையும் கேட்டறிந்த பிறகு, ‘பூடி டீசல்’ அமலாக்கத்தை சீரமைக்கும் வகையில் இந்த மேம்பாடுகளைச் செயல்படுத்த மடானி அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது,” என இரண்டாம் நிதி அமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.
டீசல் வாகனங்களின் உரிமையாளர் மாற்று கட்டண விலக்கு மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
டீசல் வாகன உரிமையாளர்கள் மேலும் பயனர்கள் தங்களின் உடைமைப் பதிவுகளைப் புதுப்பிப்பதை எளிதாக்கும் வகையில், போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் சாலைப் போக்குவரத்து இலாகா(ஜேபிஜே), வரும் 2026 ஜூலை 1 முதல் மூன்று மாத காலத்திற்கு டீசல் வாகனங்களுக்கான ‘தற்காலிக உரிமையாளர் மாற்று (THM) கட்டண விலக்கு ஊக்கத்தொகை திட்டத்தை’ செயல்படுத்தவுள்ளது.
இந்த விலக்கு, வாகனத்தின் வகை மேலும் பதிவு செய்யப்பட்ட இடத்தைப் பொறுத்து தற்போது 100 ரிங்கிட் வரை வசூலிக்கப்படும் உரிமையாளர் மாற்று கட்டணத்தை உள்ளடக்கியதாகும். வாகன உடைமைத் தரவு, நடப்பில் உள்ள சாலை வரி ஆகியவற்றைத் தகுதி அளவுகோல்களாகக் கொண்டு ‘பூடி டீசல்’ செயல்படுத்தப்படுவதை இந்த நடவடிக்கை கருத்தில் கொண்டுள்ளது.
இந்த கட்டண விலக்கின் மூலம், டீசல் வாகனங்களின் உரிமையாளர்களும் உண்மையான பயனர்களும் தங்களின் வாகன உடைமைத் தகவல்கள் சரியான முறையிலும் உண்மையான பயன்பாட்டிற்கு ஏற்பவும் இருப்பதை உறுதி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
மக்களின் வசதிக்காக, ஜேபிஜே வார இறுதி நாட்களிலும் சேவை முகப்பிடங்களை திறக்கவுள்ளது. வரும் 2026 ஜூலை 4 முதல் ஜூலை 26 வரை, அனைத்து மாநில ஜேபிஜே அலுவலகங்களிலும் மாநில யு.டி.சி. (UTC) வளாகங்களில் உள்ள ஜேபிஜே அலுவலகங்களிலும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இச்சேவை வழங்கப்படும்.
இம்முகப்பிடங்கள் வாகன உரிமையாளர் மாற்றம், மோட்டார் வாகன உரிமம் (LKM) அல்லது சாலை வரி புதுப்பித்தல், அது தொடர்பான பிற ஜேபிஜே விவகாரங்கள் உட்பட ‘பூடி டீசல்’ விண்ணப்பம் சார்ந்த பணிகளைக் கையாளும்.
மானியத் தகுதியை வாகனத்தின் உண்மையான பயனருக்கு மாற்றிக்கொள்ள அனுமதி
டீசல் வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர், அவ்வாகனத்தின் உண்மையான பயனராக இருக்கும் தங்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு டீசல் மானியத் தகுதியை மாற்றிக்கொள்ள நிதி அமைச்சு அனுமதிக்கும். எனினும், இது நிர்ணயிக்கப்படும் நிபந்தனைகள், சரிபார்ப்புகளுக்கு உட்பட்டதாகும்.
பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரைக் காட்டிலும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அந்த டீசல் வாகனத்தைப் பயன்படுத்தும் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி மாற்றத்திற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் ‘பூடி மடானி’ அதிகாரப்பூர்வ ஊடக அலைவரிசைகள் மூலம் அறிவிக்கப்படும்.
நிறுவனங்களுக்குச் சொந்தமான தனியார் பிக்-அப், ஜீப் ரக வாகனங்களுக்கும் ‘பூடி டீசல்’ விரிவாக்கம்
அன்றாட வேலைகளுக்காக டீசல் வாகனங்களைப் பயன்படுத்தும் சிறு வணிகர்கள் பயனர்களின் கருத்துகளையும் மேல்முறையீடுகளையும் கருத்தில் கொண்டு, நிறுவனங்களுக்குச் சொந்தமான தனியார் பிக்-அப், ஜீப் ரக வாகனங்களுக்கும் ‘பூடி டீசல்’ திட்டத்தை விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், சிறு வணிகம், தினசரிப் பயணம், கிராமப்புற அல்லது உள்நாட்டுப் பகுதி நடவடிக்கைகளுக்காக டீசல் பிக்-அப், ஜீப் வாகனங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப் பிரிவைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள், விண்ணப்ப முறைமை புதுப்பிக்கப்பட்ட பிறகு ‘பூடி மடானி’ அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் வாயிலாகச் சரிபார்ப்புகளையும் விண்ணப்பங்களையும் மேற்கொள்ளலாம்.
தீபகற்ப மலேசியாவில் ‘பூடி டீசல்’ ஆரம்பகட்ட அணுகல் ஜூன் 27 முதல் தொடங்குகிறது
தீபகற்ப மலேசியாவில் தகுதியுள்ள தனியார் டீசல் வாகனப் பயனர்களுக்கான ‘பூடி டீசல்’ ஆரம்பகட்ட அணுகல் நாளை, 2026 ஜூன் 27 முதல் தொடங்குகிறது. இந்த ஆரம்பகட்ட அணுகல் காலக்கட்டத்தில், இத்திட்டத்தில் பங்கேற்கும் எரிபொருள் நிலையங்களில் மைகாட் (MyKad) சரிபார்ப்பு மூலம் ஒரு லிட்டர் 2.15 ரிங்கிட் என்ற மானிய விலையில் டீசலை வாங்க முடியும். தகுதியுள்ள மலேசியர்களுக்கு ஒரு லிட்டர் 2.10 ரிங்கிட் என்ற மானிய விலையிலான ‘பூடி டீசல்’ முழுமையான அமலாக்கம் 2026 ஜூலை 1 முதல் நாடு தழுவிய அளவில் தொடங்கும். ‘பூடி டீசல் தனிநபர்’ பிரிவின் கீழ் உள்ள தற்போதைய பயனாளிகளுக்கு ஜூன் 2026 தொடக்கத்தில் 400 ரிங்கிட் ரொக்க உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆரம்பகட்ட அணுகல் மூலம், தகுதியுள்ள பயனாளிகள் இப்போது மைகாட் சரிபார்ப்பு மூலமாகவும் மானிய விலையில் டீசலை வாங்க முடியும்.
அதே வேளையில், தீபகற்ப மலேசியாவில் இதற்கு முன்பு ‘பூடி டீசல் தனிநபர்’ ரொக்க உதவியைப் பெறாத அதிகமான தனியார் டீசல் வாகனப் பயனர்கள், இந்த ‘பூடி டீசல்’ மூலம் மானிய விலையிலான டீசலைப் பெற முடியும். தனியார் டீசல் வாகன உரிமையாளர்கள் தங்களின் தகுதி நிலை மேலும் மாதாந்திர மானிய வரம்பை www.budimadani.gov.my என்ற ‘பூடி மடானி’ அதிகாரப்பூர்வ போர்ட்டல் வாயிலாகச் சரிபார்க்கலாம். தகுதியுடைய பிக்-அப், ஜீப் ரக டீசல் வாகன உரிமையாளர்கள் இதே அகப்பக்கத்தின் மூலம் மாதத்திற்கு கூடுதலாக 100 லிட்டர் டீசலுக்கான விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கலாம்.
இலக்குமுறை டீசல் மானிய முறைமைக்கான மாற்றம் சீராக நடைபெறுவதையும், மானியத்தின் பலன்கள் தகுதியுள்ள மலேசியர்களைச் சென்றடைவதையும் உறுதி செய்வதற்காக, அரசாங்கம் தொடர்ந்து ‘பூடி டீசல்’ ஆரம்பகட்ட அணுகல் அமலாக்கத்தைக் கண்காணிப்பதோடு மக்களின் கருத்துகளையும் விரிவாகப் பரிசீலிக்கும்.



