International
oi-Nantha Kumar R
கராகஸ்: அமெரிக்காவின் அண்டை நாடாக உள்ள வெனிசுலாவில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மொத்தம் 900 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இன்ற காலையில் திடீரென்று வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் அண்டை நாடாக வெனிசுலா உள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே கரிபீயன் கடல் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தற்போது வெனிசுலாவில் பெரும் துயரம் நடந்துள்ளது. கடந்த 24ம் தேதி திடீரென்று இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதல் நிலநடுக்கம் 7.2 என்ற ரிக்டர் அளவிலும், அடுத்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும் பதிவானது. அடுத்தடுத்த சில நொடிகளில் நிகழ்ந்த இரண்டு நிலநடுக்கமும் சக்தி வாய்ந்தவையாக இருந்தது. இதனால் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து சேதமடைந்தன.
இன்னும் ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். இன்று 3வது நாளாக மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வரை மொத்தம் 920 பேர் பலியாகி உள்ளனர். 3,360 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்னும் பலநூறு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தற்போது மீட்பு பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் தான் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவின் வடக்கு கடற்கரை நகரங்களில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கராகஸ் மற்றும் அதனை சுற்றிய மராகே உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 4.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
ஏற்கனவே இரட்டை நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து 900க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது வெனிசுலா மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

