International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று அமெரிக்கா வார்னிங் செய்த நிலையில் தற்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் போர் பதற்றம் தொடங்கி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நீண்ட இழுபறிக்கு பிறகு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

மேலும் சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து ஈரான் தான் மூடிவைத்த ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தது.
இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியை சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்/வி எவர் லவ்லி’ என்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் சார்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது மீண்டும் போர் பதற்றத்தை தூண்டியது. மேலும் அமெரிக்காவும் கடுமையாக கண்டித்தது. இதுபற்றி டொனால்ட் டிரம்பிடம் கேட்டபோது, ”இந்த தாக்குதல் ஈரானின் முட்டாள் தனமான செயல்” என்று விமர்சனம் செய்தார். அதோடு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு ”விரைவில் நீங்களே தெரிந்துகொள்வீர்கள்” என்றார்.
இந்நிலையில் தான் தற்போது ஈரான் மீது அமெரிக்கா திடீரென்று தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்காவின் போர் விமானங்கள் ஈரானில் உள்ள ஏவுகணை சேமிப்பு மையம், ட்ரோன் பாதுகாப்பு மையம் மற்றும் கடலோர ரேடார் அமைந்துள்ள இடங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை அமெரிக்காவின் அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) உறுதி செய்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்திற்கு பிறகு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய முதல் ‘அட்டாக்’ இதுவாகும். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரானும், அமெரிக்காவிற்கு வார்னிங் செய்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ஐஆர்ஜிசி எனும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வார்னிங் செய்தது. மேலும் தாக்குதலையும் தொடங்கியது. இருப்பினும் ஈரான் சார்பில் அமெரிக்காவின் எந்தெந்த ராணுவ பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தகவல் உடனடியாக வெளிவரவில்லை. இதனால் மீண்டும் ஈரான் – அமெரிக்கா இடையே போர் வெடிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

