கொல்கத்தாவில் பிறந்த ஷங்க் மித்ரா, அங்குள்ள புகழ்பெற்ற ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார்.
அதன் பிறகு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அவர், உலகப் புகழ்பெற்ற கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறார்.
தனது தொழில் வாழ்க்கையை புகழ்பெற்ற ‘PwC’ என்ற நிறுவனத்தில் தொடங்கி இருக்கிறார். அங்கு 5 ஆண்டுகள் நிதி மற்றும் வணிக ஆலோசனை பிரிவில் பணியாற்றியிருக்கிறார்.

பிறகு 2009-ல் ‘பிடெலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ நிறுவனத்தில் அனலிஸ்ட்டாக இணைந்திருக்கிறார். தவிர சிட்டாடல் மற்றும் மில்லினியம் மேனேஜ்மென்ட் போன்ற உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ரியல் எஸ்டேட் மற்றும் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் நிபுணராகப் பணியாற்றியிருக்கிறார்.
தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு வெல்டவர் நிறுவனத்தில் இணைந்த மித்ரா, தனது அசாத்திய திறமையால் 2018-ல் முதன்மை முதலீட்டு அதிகாரியாகவும் பின்னர் 2020 அக்டோபரில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

