Last Updated:
நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த கௌதமி, எளிமையான மற்றும் பொருளாதார ரீதியாகச் சவாலான பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தேசிய அளவிலான தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கௌதமி ஜெயராமன் தங்கப் பதக்கம் வென்றதுடன், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.
65 ஆவது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தமிழகம் சார்பில் பங்கேற்ற கௌதமி ஜெயராமன், தொடக்கம் முதலே சக வீராங்கனைகளுக்குக் கடுமையான சவால்களை அளித்து அசுர வேகத்தில் இலக்கை நோக்கிப் பாய்ந்து சென்று வெறும் 2.04 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
இந்த வெற்றியின் மூலம், ஜப்பான் நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கும் தேர்வாகி தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடி தந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த கௌதமி, எளிமையான மற்றும் பொருளாதார ரீதியாகச் சவாலான பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். நிதி நெருக்கடி இருந்தபோதிலும், விளையாட்டுத் துறையில் தனது பயணத்தைத் தொடரும் அதே வேளையில், அவர் தமிழ்நாடு காவல்துறையில் காவலராகவும் பணியாற்றி வருகிறார்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த நடுத்தர தொலைவு ஓட்டப்பந்தய வீராங்கனை ஒருவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருப்பது மாநிலத்தின் தடகள வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
Jun 26, 2026 12:44 PM IST


