Last Updated:
வி.கே. பாண்டியனின் மனைவி, முன்னாள் ஐஏஎஸ் சுஜாதா ரவுத் கார்த்திகேயன், நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே. பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஒடிசா அரசில் முக்கியத் துறைகளில் பணியாற்றிய அதிகாரியுமான சுஜாதா ரவுத் கார்த்திகேயன், இன்று பிஜு ஜனதா தளம் (BJD) கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயகின் நெருங்கிய உதவியாளரான வி.கே. பாண்டியன் மீது கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. மேலும், 2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பிஜேடி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாண்டியன் தீவிர அரசியலிலிருந்து விலகினார்.
ஐ.ஏ.எஸ்.ஆன வி.கே. பாண்டியன், ஒடிசாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். சுஜாதா ரவுத் கார்த்திகேயனை திருமணம் செய்தார். வி.கே. பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவரது மனைவி சுஜாதா ரவுத் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைமையகமான ‘சங்கா பவனில்’ சுஜாதா அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முன்னிலையில், கட்சியில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சுஜாதா ரவுத், “நவீன் பட்நாயக்கின் தலைமையின் கீழ் 24 ஆண்டுகள் ஒடிசா மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இன்று, அதே தலைமையின் கீழ் மீண்டும் மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
ஜெகன்னாதர், கட்சித் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பிஜேடி தொண்டர்களின் ஆசியுடன், ஒடிசா மக்களுக்காக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.
இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக், “நிச்சயமாக, அடுத்து வரும் தேர்தல்களிலும் பிஜேடி கட்சியை நானே வழிநடத்துவேன். இதை நான் மிகத் தெளிவாகத் தெரிவிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
2000-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா, மார்ச் 13, 2025 அன்று அரசுப் பணியிலிருந்து விலகினார். முந்தைய பிஜேடி அரசாங்கத்தின் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமான ‘மிஷன் சக்தி’யை விரிவுபடுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்று பரவலாகக் கருதப்படுகிறது.
Odisha (Orissa)


