கோலாலம்பூர்:
ஜோகூர் மாநிலத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்து அம்னோவிலிருந்து விலகிய டத்தோ டாக்டர் முகமட் புவாட் சார்காஷியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சாலே, அம்னோ ஒன்றும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குச் சொந்தமான கட்சி அல்ல என மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.
ஜோகூர் அம்னோ இளையோர் நலனைப் புறக்கணிப்பதாகக் கூறுவது முற்றிலும் அடிப்படையற்றது என்று குறிப்பிட்ட அக்மால், பாரிசான் நேஷனல் அறிவித்துள்ள 56 வேட்பாளர்களில் பதின்மூன்று பேர் நாற்பது வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தன் சொந்தப் பிள்ளைக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காகக் கட்சியின் கொள்கைகளை விமர்சிப்பது நியாயமற்றது என்றும் அவர் கூறினார்.
மேலும், வேட்பாளர் தேர்வில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு இருப்பதாகப் புவாட் சார்காஷி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு நாட்டின் மன்னராட்சி முறைக்கு எதிரானதும், மிகவும் எல்லை மீறிய செயல் என்றும் குறிப்பிட்ட டாக்டர் அக்மால், இத்தகைய அவதூறானப் பேச்சு குறித்து அம்னோ இளைஞர் பிரிவு மிக விரைவில் நாடு தழுவிய அளவில் காவல்துறைப் புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



