Tamilnadu
oi-Prasanna Venkatesh
ரேஷன் கடையில் நீண்ட வரிசை, பொருள் தட்டுப்பாடு, தொழில்நுட்ப கோளாறு போன்ற பிரச்னைகளால் மாதாந்திர உணவுப் பொருட்களை பெற முடியாமல் அவதிப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை (One Nation One Ration Card – ONORC) திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்கள் இனி தங்களுக்கு வசதியான எந்த நியாயவிலைக் கடையிலிருந்தும் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

டக்கரான சேவை
மத்திய அரசு ‘ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை’ திட்டத்தில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த நியாய விலைக் கடைகளிலும் இருந்து தானியங்களையும், உணவு பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை ஏற்று 2020ல் நடைமுறைப்படுத்தியது.
என்ன மாற்றம் வந்துள்ளது?
இதுவரை ஒரு குடும்பம் தங்கள் முழு மாதாந்திர ரேஷன் பொருட்களை ஒரே நியாய விலைக் கடையில் இருந்துதான் பெற வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. கோதுமையை ஒரு கடையிலும், அரிசியை வேறு கடையிலும் எடுத்துக்கொள்ளலாம். கடையில் தானியம் இல்லாதபோது அல்லது வரிசை அதிகமாக இருக்கும்போது வேறு கடைக்கு செல்லலாம்.
இந்த நெகிழ்வுத்தன்மை குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஒரு கடையில் தானியம் இல்லாததால் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக முழு ரேஷனையும் பெற முடியாத சூழல் இனி வராது.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணம்
இந்த புதிய ஏற்பாடு குறிப்பாக வேலைக்காக ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்லும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ரேஷன் கடையை நம்பியிருக்க வேண்டியிருந்தது. இப்போது அவர்கள் எங்கு வேலை செய்தாலும், அங்குள்ள எந்த நியாய விலைக் கடையிலும் தங்கள் ரேஷனை பெற்றுக்கொள்ளலாம்.
ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவு பாதுகாப்பு உதவிகள் நாடு முழுவதும் எளிதாக கிடைக்கும்.
राशन लेने के लिए अब एक ही दुकान पर निर्भर रहने की आवश्यकता नहीं है।
One Nation One Ration Card (ONORC) के तहत पात्र लाभार्थी देश की किसी भी उचित मूल्य की दुकान से अपना राशन प्राप्त कर सकते हैं, जिससे खाद्यान्न तक पहुँच और भी आसान एवं सुविधाजनक बनती है।#OneNationOneRationCard pic.twitter.com/x0tfXxRbv4
— B.L Verma (@blvermaup) June 20, 2026
ஏடிஎம் போல இயங்கும் திட்டம்
இந்த திட்டம் ஏடிஎம் வங்கி சேவையைப் போல இயங்கும். எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் எந்த ஏடிஎம்மில் இருந்தும் பணம் எடுக்க முடியும். அதேபோல, ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் இனி ஒரு குறிப்பிட்ட கடையை மட்டும் நம்பியிருக்க வேண்டியதில்லை. நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கள் உரிமையை பெற்றுக்கொள்ளலாம்.
இது ஏன் முக்கியம்?
‘ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை’ திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதன் நோக்கம் ரேஷன் அட்டையின் போர்ட்டபிலிட்டியை உறுதி செய்வது தான். இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றம் மக்கள் தங்களுக்கான உணவு பொருட்தளை எளிதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றியுள்ளது.
குறிப்பாக நகரங்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான குடியேறிய தொழிலாளர்கள் இந்த மாற்றத்தால் நேரடியாக பயனடைவார்கள். இனி அவர்கள் ரேஷன் கடைக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. எங்கு இருந்தாலும் தங்கள் உரிமையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த புதிய ஏற்பாடு ரேஷன் விநியோக அமைப்பின் திறனை அதிகரிக்கும் என்றும், மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் அரசு நம்புகிறது.

