Last Updated:
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம், சிக்கிமில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அருணாசல பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலான ஒன்றரை மணி நேரத்தில் வரலாறு காணாத அளவில் பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக சுபன்சிரி மாவட்டத்தில் 7 புள்ளி 3 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. தொடர் மழையால் போஸ்ஸா மற்றும் பரே ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதன்காரணமாக சுபன்சிரி மாவட்டத்தின் அருகே உள்ள கேயி பன்யோர் மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. யாசாலி பகுதியில் உள்ள நீப்கோ நீர்மின் திட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகே, கட்டுமானத்தில் இருந்த தடுப்புச்சுவர் ஒன்று வெள்ளத்தின் அழுத்தத்தால் இடிந்து விழுந்தது. இதனால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கிருந்த 15 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி நீர்மின் திட்ட ஊழியர்கள் 5 பேர் காணாமல் போனதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்தது. அதைத்தொடர்ந்து மீட்பு குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதில் 35 வயதான நிர்மலா குப்தா சடலமாக மீட்கப்பட்டார். எஞ்சியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று சுபன்ஷிரி உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏராளமான வீடுகள், சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்புகளுக்குள் வெள்ளநீருடன் சேரும் சகதியும் புகுந்த நிலையில் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு மாநில மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு உதவ முன்னாள் ராணுவ வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பால் 17 பேர் காயமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
நிலச்சரிவால் கேயி பன்யோர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிமின் வழித்தடத்திலும், ஐசிஆர்-ஹோஜ்-யசாலி தேசிய நெடுஞ்சாலை நெடுகிலும் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து அசாமிலும் கனமழை தொடங்கியுள்ளது. தேமாஜி, நல்பாரி, திப்ருகர், லக்கிம்பூர் பஜாலி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் சுமார் 14 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொட்டித் தீர்த்த கனமழை.. காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு.. அருணாச்சல பிரதேசத்தில் மக்கள் கடும் பாதிப்பு


