தங்கம் விலை 10 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி; வெள்ளி விலை 4 ஆண்டுகளில் இல்லாத சரிவு..!!
உலகளவில் தங்கம், வெள்ளி விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக ஜூன் காலாண்டில் தங்கம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, வெள்ளி நான்கு ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவை கண்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கான ஜூன் காலாண்டில் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதாவது தங்கம் அதன் உச்ச விலையிலிருந்து கிட்டத்தட்ட 24% வரை சரிவடைந்துள்ளது. வெள்ளியின் விலையும் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஜூன் காலாண்டில் இதுவரை தங்கம் கிட்டத்தட்ட 12 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது, இது டிசம்பர் 2016-க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி. அதேவேளையில், வெள்ளி 17.6 சதவீதம் சரிந்துள்ளது; இது ஜூன் 2022-க்குப் பிறகு ஏற்பட்ட மிகக் கடுமையான வீழ்ச்சியாகும். இதுவே ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் தங்கம் 10%, வெள்ளி 28 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. அதன் பின்னர் ஏப்ரல் முதல் விலை சரிவில் தான் இருக்கிறது.
வரலாற்று உச்ச விலையிலிருந்து பார்த்தால் ஒரு அவுன்ஸ் 5,417 டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட தங்கம், அதிலிருந்து 24 சதவீதம் சரிந்துள்ளது; ஜனவரி 28 அன்று ஒரு அவுன்ஸ் 117 டாலர் என்ற உச்சத்தை எட்டிய வெள்ளி, சுமார் 47 சதவீதம் சரிந்துள்ளது. இந்திய சந்தையிலும் இதே மாற்றம் எதிரொலித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரியில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1.33 லட்சத்திற்கும் ஒரு கிலோ வெள்ளி 4.26 லட்சத்திற்கும் விற்கப்பட்டது. அதுவே இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1.08 லட்சத்திற்கும் ஒரு கிலோ வெள்ளி 2.5 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக போர் சூழல், அரசியல் சூழலில் பதற்றம் நிலவும் போது, மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக ருதி வாங்குவார்கள். ஆனால் தற்போதைய சூழலில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து வருகின்றனர். உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணெய் போன்ற பொருட்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. டாலர் மதிப்பு உயரும்போது, தங்கம் வாங்குவது பிற நாட்டு நாணயங்களுக்குச் செலவு மிக்கதாக மாறும், இதனால் அதன் தேவை குறையும்.
அதே வேளையில் தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த பங்குகளான Precious Metal ETFs (Exchange Traded Funds) ஆகியவற்றில் இருந்த முதலீடுகளை மக்கள் அதிகளவில் விற்று வெளியேறி வருகின்றனர். உலகளவில் ஈடிஎஃப்களில் மதிப்பு சுமார் 4.2% வரை சரிந்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட சூழலிலும் தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் இருக்கிறது. இதற்கு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவதே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

