ஜூலை 1 முதல்.. டிக்கெட் இல்லாமல் ரயிலில் போனால் ரூ.500 அபராதம்! இந்திய ரயில்வே போட்ட ஸ்கெட்ச்!
நம் ஊரில் இருக்கும் போக்குவரத்து முறைகளுள் மிகவும் மலிவானது ரயில் போக்குவரத்து. இதனால் தான் பலரின் விருப்பத் தேர்வாக ரயில் பயணம் இருக்கிறது. அதோடு ரயில் பயணம் செய்யும்போது பலர் வசதியாகவும் உணர்கின்றனர். நீங்கள் அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவராக இருந்தால்.. இந்தப் பதிவு உங்களுக்குத்தான். வருகின்ற 2026=ஆம் ஆண்டின் ஜூலை 1 முதல் இந்திய ரயில்வே ஒரு சில புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வரவுள்ளது. எனவே அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்கள்.. அது பற்றி தெரிந்து கொள்வது நல்லது. இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
எவ்வளவு அபராதம்?: இதுவரையில் ரயில் பயணம் செய்யும்போது முறையான டிக்கெட் பெறாமல் பயணம் செய்து டிடிஆர்-ரிடம் சிக்கிக்கொண்டால் குறைந்தபட்சமாக 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த தொகை அப்படியே இரு மடங்காக வசூலிக்கப்படவுள்ளது. மலிவான விலையில் வழங்கப்படும் டிக்கெட்டையே எடுக்காமல் பயணம் செய்யும் ஒரு சிலரை தடுப்பதற்காகவும், அனைவரும் முறையாக டிக்கெட் பெற்று பயணம் செய்வதை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதற்கெல்லாம் இந்த 500 ரூபாய் அபராதம்?: ரயில்வே சட்டத்தின் படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் மட்டும் இந்த அபராதம் விதிக்கப்படுவதில்லை. மேலும் சில தவறுகளுக்கும் இதே அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. உங்களிடம் முறையான டிக்கெட் இல்லாமல் அல்லது பாஸ் இல்லாமல் பயணம் செய்தாலும் இதே அபராத தொகை பொருந்தும்.

அதேபோல பயண தேதிக்கு முன்னரே வாங்கிய டிக்கெட்டைப் பயன்படுத்துவதும் தவறுதான். எனவே டிக்கெட்டில் நீங்கள் பயணம் செய்கின்ற தேதி சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் எடுத்த டிக்கெட் தூரத்திற்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அதைத் தாண்டி பயணம் செய்தாலும் அபராதம் விதிக்கப்படும். இன்னும் சிலர் ஜெனரல் கிளாஸ் டிக்கெட் வாங்கிவிட்டு ஸ்லீப்பர் கிளாஸ் அல்லது ஏசி கிளாஸில் பயணிப்பார்கள். இதுபோன்ற தவறுக்கும் இதே 500 ரூபாய் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.
தற்போது ஜன விஸ்வாஸ் சட்டம் 2026-இன் கீழ் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 500 ரூபாய் அபராதம் மட்டுமல்ல நீங்கள் டிக்கெட் எடுக்காமல் எவ்வளவு தூரம் பயணித்தீர்களோ? அந்த டிக்கெட் கட்டணமும் சேர்த்து 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மற்றபடி பிற விதிகளில் மாற்றம் இல்லை. அபராதத் தொகை மட்டுமே இரண்டு மடங்காக மாறியுள்ளது.
அதிகபட்ச தண்டனை எதிலும் மாற்றமில்லை. ரயில்வே சட்டத்தின் கீழ் டிக்கட் இல்லாமல் பயணித்து வேண்டுமென்றே ரயில்வே நிர்வாகத்தை ஏமாற்ற நினைத்தால் நீதிமன்றத்தின் மூலம் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ஒரு சிலருக்கு இவை இரண்டும் சேர்த்தே விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. டிக்கட் செக்கர் உங்களிடம் இது போன்ற விஷயங்களுக்கு அபராதம் கேட்பார். அதை நீங்கள் செலுத்தாமல் மறுக்கும் பட்சத்திலும் நீதிமன்றத்தின் மூலம் அபராதம் மற்றும் சிறை தண்டனை ஆகிய இரண்டையும் சேர்த்து பெற வேண்டிய சூழல் ஏற்படலாம்
நாட்டில் இருக்கும் மலிவான போக்குவரத்து முறை ரயில்வே தான். அப்படி இருக்கையில் அந்த டிக்கெட்டையே எடுக்காமல் போகும் சிலர் சிலரை கண்டுபிடிப்பதற்காகவே இந்த முயற்சி. எனவே ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் அவசரத்தில் கூட டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யாதீர்கள். முறையாக டிக்கெட் பெற்று பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள். டிக்கெட் பரிசோதகருக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்றும் இந்திய ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
