Last Updated:
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்படுத்தினாலும் வாகன காப்பீடு பாதிக்காது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம், இறக்குமதி செலவு குறைவு, அமெரிக்கா பிரேசில் ஜப்பான் உதாரணம்
எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் காப்பீடு பாதிக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் வழக்கமான பெட்ரோலுடன், தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை 20 சதவீதம் கலந்து E20 பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களுக்கு காப்பீடு மறுக்கப்படுதாக தகவல் பரவியது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம், எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் பொருளாதார ரீதியாக பலன் அளிக்கக் கூடியது என விளக்கம் அளித்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, இந்தியாவுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவுயுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எத்தனால் கலத்தல் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை எனவும், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


