Last Updated:
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கால்நடைத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ரயில்வே இணை அமைச்சராக உள்ள ரவ்நீத் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொடர்ந்து 3ஆவது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கால்நடைத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
ரயில்வே இணை அமைச்சராக உள்ள ரவ்நீத் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. மேலும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, டெல்லி பாஜக தலைவராகவும், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, உத்தரப்பிரதேச பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ் நாட்டுக்கு வரும் 27ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.
இந்த சூழலில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இதுதொடர்பான புகைப்படங்களை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிப்பதற்காகவே குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


