Business
oi-Prasanna Venkatesh
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டு உலகமே வியந்து கொண்டிருக்கும் வேளையில், அதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் கட்டமைப்பு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
உலகளாவிய பங்குச்சந்தைகளில் ‘ஏஐ குமிழி’ (AI Bubble) உடைந்து சிதறுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஏஐ துறையில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்தின் மதிப்பும் கற்பனைக்கு எட்டாத வகையில் அதிக மதிப்பீடுகளை கொண்டு இருக்கிறது, உள்கட்டமைப்பிற்கான அதீத செலவுகள் மற்றும் தற்போதைக்குக் கண்ணில் தென்படாத லாபம் ஆகியவையே இந்த ஆபத்தான சூழலுக்குக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு ஏற்றார் போல் இன்று ஏஐ துறைக்கு ஆதாரமாக இருக்கும் செமிகண்டக்டர் சிப் நிறுவனங்கள் இருக்கும் கொரிய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்து, ஒட்டுமொத்த ஏஐ நிறுவனங்களும் தரையை தட்டியுள்ளது.

முதலீட்டு வல்லுனர்கள்
பங்குச்சந்தை முதலீட்டாளரான ரே டாலியோ மற்றும் தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான யான் லெகுன் ஆகியோர், இந்த ஏஐ முதலீடுகளுக்கும் அவற்றிலிருந்து கிடைக்கும் உண்மையான லாபத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய இடைவெளியை தொடர்ந்து மறைக்க முடியாது. அந்த எச்சரிக்கை இப்போது உண்மையாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், தென் கொரியப் பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய சரிவு பதிவு செய்து பயமுறுத்தியுள்ளது.

கொரியாவின் கருப்பு செவ்வாய்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக விளங்கும் செமிகண்டக்டர் (சிப்) தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தென் கொரிய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ள தென் கொரிய பங்குச்சந்தை, இதுவரை கண்டிராத ஒரு வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது.
சமீபகாலமாக புதிய உச்சங்களைத் தொட்டு, முதல் முறையாக 9,000 புள்ளிகள் என்ற வரலாற்று எல்லையைக் கடந்திருந்த தென் கொரியாவின் கோஸ்பி (KOSPI) குறியீடு, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் திடீரென 9.99 சதவீதம் வரை சரிந்தது.
தென் கொரிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த அதீத பதற்றம் மற்றும் தொடர் விற்பனை காரணமாக, கொரியா எக்ஸ்சேஞ்ச் (Korea Exchange) வர்த்தகத்தை 20 நிமிடங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ‘சர்க்யூட் பிரேக்கர்’ (Circuit Breakers) முறையை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் பலமுறை சர்க்யூட் பிரேக்கர்கள் இயக்கப்பட்டுள்ளது சந்தையின் நிலையற்ற தன்மையைக் காட்டுகிறது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் முடக்கம்
இந்த ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு ஏஐ சிப் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் பங்குகளே முக்கியக் காரணமாக அமைந்தன. ‘எஸ்கே ஹைனிக்ஸ்’ (SK Hynix) நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தன.
இதேபோல் உலகெங்கும் வாழும் சாமானிய மக்களும் அறிந்த ‘சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்’ (Samsung Electronics) நிறுவனத்தின் பங்குகளும் கிட்டத்தட்ட 13 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தன.
ஈரான் போர் உள்ளிட்ட உலகளாவிய அரசியல் பதற்றங்களையும் தாண்டி, இந்த மாத தொடக்கத்தில் சாதனை படைத்த கொரியச் சந்தை, இந்த அளவிற்குச் சரிந்ததற்கு, ஏஐ சார்ந்த முதலீட்டாளர்கள் தங்களின் லாபத்தை அவசரமாகப் புக் செய்து கொண்டு வெளியேறியதே காரணம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கச் சந்தையில் நிலவிய மந்தமான சூழலில், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்ததும் ஆசிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக உலுக்கியுள்ளது.
2000-ம் ஆண்டின் ‘டாட்-காம்’ சரிவு மீண்டும் திரும்புமா?
தற்போதைய இந்தச் சூழலை, பங்குச்சந்தை நிபுணர்கள் 2000-2002 ஆண்டுகளில் உலகம் சந்தித்த ‘டாட்-காம் பிசினஸ் சரிவுடன்’ (Dot-com Crash) ஒப்பிடுகிறார்கள். அன்று இணையதளத் தொழில்நுட்பத்தை நம்பி நிறுவனங்களின் மதிப்பீடு அளவுக்கு அதிகமாக உயர்ந்ததும், பின்னர் போதிய வருவாய் இல்லாததால் அவை திவாலானது நாம் மறக்க முடியாது. அதே போன்ற ஒரு சூழல் தான் இப்போது ஏஐ துறையிலும் உருவாகி வருகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஏஐ ஹார்டுவேர் மற்றும் சிப் வர்த்தகம் உண்மையிலேயே இன்னும் வலிமையாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க, இந்த வாரம் வெளியாகவுள்ள முன்னணி மெமரி சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜியின் (Micron Technology) காலாண்டு வருவாய் முடிவுகளே இறுதி சோதனையாக இருக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெளியேறும் அந்நிய முதலீடுகள்
தென் கொரியச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஒரே நாளில் மட்டும் சுமார் 4 டிரில்லியன் வோன் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில், விலை குறைவாகக் கிடைக்கிறது என்று ரீடைல் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை ஆர்வமாக வாங்கியுள்ளனர்.

