நீண்ட நாட்களுக்கு பின் விஜய் சொன்ன குட்டி கதை..!! அதுவும் சட்டப்பேரவையில்.. டென்ஷனான திமுக..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் இன்று உரையாற்றினார். அப்போது தனது அரசு மீதான பல்வேறு விமர்சனங்களுக்கும் விஜய் ஆவேசமாக பதில் தந்தார். இதனால் சட்டப்பேரவையில் இன்று அனல் பறந்தது. குறிப்பாக விஜய் கூறிய குட்டிக்கதை டிரெண்டாகி இருக்கிறது.
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசினார். அப்போது 1990களில் இருந்தே தன்னுடைய தொண்டர்கள் மூலம் மக்கள் பணி செய்து வருவதாகவும், சினிமாவில் இருந்து அப்படியே நேரடியாக முதலமைச்சர் பதவிக்கு வந்துவிடவில்லை என்றும் கூறினார். தான் ஆட்சி பொறுப்பேற்றது முதல் என்னென்ன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை அவர் பட்டியலிட்டார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பெண்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. அதற்காக சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பரவிக் கிடக்கிறது. நான் சொன்ன பிரச்னைகள் அனைத்தும் பல ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் விட்ட பிரச்னைகள்தான். இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே என கூறிய அவர் எதிர்க்கட்சிகள் கேட்கும்போது அக்கறையாக தெரியவில்லை. அவதூறு அரசியலாகத்தான் தெரிகிறது. எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சி என்பதால் ஆட்சி மீது ஆயிரம் பழிகளைப் போடலாம் என கூறினார்.

கடந்த 11 மாத காலமாக தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு டிஜிபி இல்லை. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு தற்போது விடையைக் கண்டுபிடிக்கிறோம் என கூறிய விஜய் இதை ஆரம்ப நிலையிலேயே யார் கட்டுப்படுத்த வேண்டும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதனைச் செய்யாதது ஏன் என முந்தைய திமுக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
தவெகவுக்கு எதுவும் தெரியாது என்கின்றனர் உண்மை தான் எங்களுக்கு ஊழல் செய்ய தெரியாது மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க தெரியாது என பதிலடி தந்தார். எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்க, விமர்சனம் செய்ய உரிமை உண்டு. எதிர்க்கட்சிகள் தாங்கள் செய்ததை யோசித்து பின்னர் நடுநிலையாகப் பேசினால் நன்றாக இருக்கும் என்று பேசினார்.
முதல்வர் விஜய் பேசுகையில், டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடித்தாகப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒரு குட்டிக்கதைக் கூறுவதற்கு முதல்வர் விஜய் அனுமதி கேட்டார். பேரவைத் தலைவர் அனுமதி அளித்த நிலையில், முதல்வர் கதையைக் கூறினார்.
அதில், “ஒரு ஊருல பெரியவர் ஒருவர் வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவித்து கண்ணில் கைவைத்து தேடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன், என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், “உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க…. அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்க அப்பாவைக் காணோம்” என்று கூறி முடித்தார்.
“எங்களுக்கும் நக்கல், நையாண்டியாக பேசத் தெரியும், சம்பந்தமில்லாத குட்டிக்கதையை எங்களுக்கும் பேசத் தெரியும். அந்தக் கதையில் பெரியவர் அப்படி கூறினார். யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்” என்றார். விஜய் தன்னுடைய பேச்சில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையுமே சாடினார்.
கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாகக் கோளாறு காரணமாக மின்வெட்டு நிகழ்கிறது. வேண்டுமென்றே சிலரின் நடவடிக்கைகளால் மின்வெட்டு நடைபெறுகிறது. மின்வெட்டு நிலைமை விரைவில் நீக்கப்படும் என்றார். புதிய கல்வி கொள்கை மத்திய அரசு திணிக்கக் கூடாது. +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டோம். நீட் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு என கூறிய அவர் பதிலுரையின் நிறைவில் Evils, Evils என்று Devils பேசக்கூடாது என்று கூறி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த செய்கையை செய்து காட்டினார்.

