ஜாசின்:
மலாக்கா, பெம்பான் (Bemban) பகுதியில் உள்ள பிரபல தோமியாம் (Tomyam) உணவகம் ஒன்றில், பச்சைப் பொருட்கள் வைக்கப்படும் குளிர்சாதனப் பெட்டிக்கு (Refrigerator) அருகே செத்த எலி ஒன்று கிடந்த அதிர்ச்சிச் சம்பவம் நகராண்மைக் கழகச் சோதனையில் அம்பலமாகியுள்ளது. இந்த உணவகத்திற்கு ஏற்கனவே 24 முறை பல்வேறு விதிமீறல்களுக்காக அபராதம் (Compounds) விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹேங் துவா ஜெயா நகராண்மைக் கழகத்தின் (MPHTJ) தலைவர் டத்தோ சபியா ஹரோன் இதுகுறித்துக் கூறுகையில், பத்து பெரண்டாம் (Batu Berendam) மற்றும் பெம்பான் பகுதிகளில் உள்ள உணவகங்களின் தூய்மைத் தரத்தைக் கண்காணிப்பதற்காக நகராண்மைக் கழகத்தின் உரிமம் மற்றும் அமலாக்கத் துறையினரால் ‘ஓப் சந்தாப்’ (Op Santap) என்ற அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இச்சோதனையின் போது, தாமான் பெம்பான் உத்தாமா (Taman Bemban Utama) பகுதியில் உள்ள அந்தத் தோமியாம் உணவகம் மிகவும் மோசமான, சுகாதாரமற்ற சூழலில் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது.
“எங்களது அதிகாரிகள் உணவகத்தைச் சோதனையிட்டபோது, சமைக்கப்படாத பச்சைப் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிக்கு மிக அருகிலேயே செத்த எலி ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் என்று, டத்தோ சபியா ஹரோன் கூறினார்.
உணவகங்களை நடத்துவோர் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தூய்மைக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் எப்போதும் முதலிடம் வழங்க வேண்டும். ஆனால், இந்த உணவகத்தின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது” என்றார்.
இந்த உணவகம் தொடர்ந்து விதிகளை மீறி வந்துள்ளதோடு, மிகவும் மோசமான தூய்மைப் பதிவைக் கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக நகராண்மைக் கழகத்தால் இந்த உணவகத்திற்கு மொத்தம் 24 முறை கூட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 12 அபராதத் தொகைகளை இந்த உணவக நிர்வாகம் இன்னும் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.
முன்னர் விதிக்கப்பட்ட பெரும்பாலான அபராதங்கள், வணிக உரிம நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்திற்காகவே வழங்கப்பட்டவை ஆகும்.
“பொதுமக்கள் பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் சுகாதாரமான முறையில் உணவுகளைப் பெறுவதை உறுதி செய்ய நகராண்மைக் கழகம் தனது தொடர் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தொய்வின்றித் தொடரும்” என்று டத்தோ சபியா ஹரோன் மேலும் உறுதியளித்தார்.



