ஒரு பரந்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க திறைசேரியின்படி, பேச்சுவார்த்தைகள் தொடரும் வேளையில், ஈரான் கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை அனுமதிக்கும் 60 நாள் பொது உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க திறைசேரி செயலாளரின் அறிவிப்பு
இந்த நடவடிக்கை, நடந்து வரும் இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும், இறுதி ஒப்பந்தத்தை நோக்கிய முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்தார்.

இந்தத் தற்காலிக தடைநீக்கம் ஓகஸ்ட் 21 வரை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடைத் தளர்வு, வங்கிச் சேவை, காப்பீடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஈரான் எண்ணெய் ஏற்றுமதியுடன் தொடர்புடைய சில சேவைகளையும் உள்ளடக்கியது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய எண்ணெய் விலைகளில் சரிவு
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளில் இரு தரப்பினரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் வேளையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கட்டுப்பாடுகளை கணிசமாக தளர்த்துவதாக இருந்தாலும், இது தற்காலிகமானது மற்றும் ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை முழுமையாக நீக்குவதற்கு சமமானதல்ல.
அதிகரித்த ஈரானிய எண்ணெய் விநியோகம் சர்வதேச சந்தைகளை வந்தடையும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த அறிவிப்பு உலகளாவிய எண்ணெய் விலைகளில் சரிவுக்கு வழிவகுத்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


