NSE Vs BSE : கடை பெருசா இருக்கிறது முக்கியமா? வியாபாரம் நடக்கிறது முக்கியமா? இதுல யாரு கிங்?
இந்தியாவில் தேசிய பங்குச்சந்தை NSE (National Stock Exchange) மற்றும் மும்பை பங்கு சந்தை BSE (Bombay Stock Exchange) என இரண்டு வர்த்தக சந்தைகள் செயல்படுகின்றன. பங்குகள் பட்டியலிடப்படுவது , வர்த்தகம் செய்வது ஆகிய அனைத்துமே இந்த இரண்டு சந்தைகளில் தான் நடக்கிறது. இதில் விரைவில் தேசிய பங்குச்சந்தை ஐபிஓ வெளியிட இருக்கிறது. இதனால் பங்குச்சந்தையில் யார் பெரிய கை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் பழமையான ஒரு பங்குச்சந்தை மும்பை பங்குச்சந்தை. ஆனால் அதன் பின்னர் தொடங்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை அதனை மிஞ்சிவிட்டது. BSE-யில் அதிக நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருந்தாலும் , வியாபாரம் மற்றும் பணப்புழக்கம் என வரும்போது NSE தான் இந்தியாவின் அசைக்க முடியாத ராஜாவாக இருக்கிறது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் (Listed Companies) :
BSE: மும்பை பங்குச் சந்தையில் சுமார் 5,955 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
NSE: தேசிய பங்குச் சந்தையில் சுமார் 2,978 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன.
NSE-யை விட இரண்டு மடங்கு அதிகமான நிறுவனங்கள் BSE-யில் உள்ளன. ஆனால், BSE-யில் மிகச்சிறிய நிறுவனங்கள் (Microcap companies) அதிகம் இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
தேசிய பங்குச் சந்தையில் நிறுவனங்கள் குறைவாக இருந்தாலும், மக்கள் எங்கு அதிகமாகப் பங்குகளை வாங்குகிறார்கள், விற்கிறார்கள் என்று பார்த்தால், NSE தான் முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியப் பங்கு வர்த்தகத்தில் 92.99% பங்குகளை NSE தன் வசம் வைத்துள்ளது. BSE வெறும் 7% மட்டுமே வைத்துள்ளது.
ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் வர்த்தகத்தில் NSE-யின் ஆதிக்கம் அசுரத்தனமானது. ஒட்டுமொத்த சந்தையில் 99.79% வர்த்தகம் NSE-யில் தான் நடக்கிறது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் வர்த்தகத்தில் NSE 74.71% பங்கைக் கொண்டுள்ளது.
ஒரு நாளின் சராசரி வர்த்தக மதிப்பு:
NSE: தினமும் சுமார் ரூ.1.06 லட்சம் கோடி மதிப்புள்ள வர்த்தகம் நடக்கிறது.
BSE: இங்கு தினசரி வர்த்தகம் சுமார் ரூ.79,500 கோடி மட்டுமே நடக்கிறது.
அதாவது கடை எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பது முக்கியமில்லை அதில் எவ்வளவு வியாபாரம் நடக்கிறது என்பது தான் முக்கியம். அந்த வகையில் தேசிய பங்குச்சந்தை , மும்பை பங்குச்சந்தையை விஞ்சிவிட்டது. கடந்த சில வருடங்களாக BSE டெரிவேட்டிவ்ஸ் (Derivatives / Options) பிரிவில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, தனது சந்தைப் பங்கை கணிசமாக உயர்த்தி வருகிறது. 2024-ல் வெறும் 3.7% ஆக இருந்த இவர்களின் ஆப்ஷன்ஸ் பிரீமியம் சந்தை பங்கு, 2026-ல் 28% ஆக உயர்ந்துள்ளது.
NSE நிறுவனம் தனது பிரம்மாண்டமான IPO வெளியிடத் தயாராகி வருகிறது. இதற்காக SEBI-யிடம் அவர்கள் சமர்ப்பித்த வரைவு அறிக்கையில் (DRHP) தான் இந்த ஒப்பீடுகள் வெளியாகியுள்ளன. இந்த IPO-வின் மதிப்பு சுமார் ரூ.30,000 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிகமானவர்கள் போட்டி போட்டு கொண்டு வாங்க கூடிய ஒரு பங்காகவும் அதிக மதிப்பு கொண்ட ஐபிஓ-ஆகவும் NSE ஐபிஓ இருக்க போகிறது.
சட்டப்படி ஒரு பங்குச்சந்தை நிறுவனம் தன்னைத்தானே தனது சந்தையில் பட்டியலிட முடியாது (Self-listing கிடையாது). எனவே, NSE பங்குகள் விற்பனைக்கு வரும்போது அது BSE பங்குச்சந்தையில் தான் பட்டியலிடப்படும். ஏனெனில் ஏற்கனவே BSE-யின் பங்குகள் NSE-யில் பட்டியலிடப்பட்டுள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
