
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
சோளங்கந்தை தோட்டத்திலுள்ள தேயிலை தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் தற்போது காடுகளாக மாறியுள்ளன. இவ்வாறான சூழலில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த போதே, குறித்த பெண் தொழிலாளிலாளியை பாம்பு தீண்டியுள்ளது. உடனடியாக அவருடன் பணிபுரிந்த ஏனைய பெண் தொழிலாளர்கள், அவரை நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்ற போதிலும், அவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் உயிரிழந்த சம்பவம் (ஜூன் 17) இடம்பெற்றுள்ளது. அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலிக்காகச் சோளங்கந்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டங்களைச் முறையாகத் துப்பரவு செய்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

