Last Updated:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 49-வது பொதுக்குழு நிகழ்வு (RIL AGM 2026) இன்று நடைபெற்றது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 49-வது பொதுக்குழு நிகழ்வு (RIL AGM 2026) இன்று நடைபெற்றது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 49-வது ‘RIL AGM 2026’ நிகழ்வில் 44 லட்சம் பங்குதாரர்கள் இடையே உரையாற்றினார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி திட்டம் குறித்து அவரது பேச்சை முதலீட்டாளர்களும், ஆய்வாளர்களும் உன்னிப்பாகக் கவனித்தனர். அவரைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் தலைவரும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிர்வாக இயக்குநருமான ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் (AGM) பங்குதாரர்களிடையே உரையாற்றினார்.
தனது உரையின்போது, ஜியோவின் சந்தாதாரர் எண்ணிக்கை 524 மில்லியனைக் கடந்துள்ளதாக ஆகாஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) மூலம் தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ‘ஃபிக்ஸட் வயர்லெஸ் பிராட்பேண்ட்’ (fixed wireless broadband) சேவை மக்களிடையே வேகமாகப் பிரபலமடைந்து வருவதை இது உணர்த்துவதாகக் கூறினார்.
5ஜி சேவையைப் பொறுத்தவரை, ஜியோவின் 5ஜி சந்தாதாரர் எண்ணிக்கை 268 மில்லியனைக் கடந்துள்ளதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். இதன் மூலம், ஒரே நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே மிகப்பெரிய 5ஜி பயனர் தளத்தைக் கொண்ட நிறுவனமாக ஜியோ திகழ்கிறது எனவும், கடந்த ஆண்டில் மட்டும் 77 மில்லியன் புதிய 5ஜி சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
RIL AGM 2026 | “524 மில்லியன் ஜியோ சந்தாதாரர்கள்…” – 49 ஆவது ஆண்டு பொதுக்குழு நிகழ்வில் ஆகாஷ் அம்பானி பெருமிதம்!


