Tamilnadu
oi-Vishnupriya R
சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனையை நடத்தினர். நள்ளிரவு வரை நடந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பிடிபட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் எப்போது நுழைவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் நுழைந்தால் அங்கு ‘பண மழை’ பொழியும் என்பது மட்டும் விதியாகிவிட்டது.

சில நாட்களுக்கு முன்புதான் தமிழகம் முழுவதும் உள்ள 62 சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடியாகப் புகுந்து, கணக்கில் வராத ரூ.37.76 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த பதற்றம் தணிவதற்குள் அடுத்த அதிரடியில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை தமிழகத்தின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை (RTO) குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் (கூடுதல் டிஜிபி) அருண் அவர்களின் உத்தரவின் பேரில், நேற்று பிற்பகல் ஒரே நேரத்தில் தமிழகத்தின் 40 முக்கிய RTO அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களுக்குள் அதிகாரிகள் நுழைந்தனர்.
வழக்கமான பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்த சென்னை வளசரவாக்கம், அண்ணா நகர், கொளத்தூர், புளியந்தோப்பு முதல் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, கோவை, சேலம், மயிலாடுதுறை எனத் தமிழகத்தின் நாலாப்பக்கமும் உள்ள அலுவலகங்களின் கதவுகள் சட்டென்று உள்பக்கமாகப் பூட்டப்பட்டன.
“யாரும் வெளியே போகக் கூடாது; யாரும் உள்ளேயும் வரக் கூடாது. உங்களுடைய மொபைல் போன்களை இங்கே வையுங்கள்…” – அதிகாரிகளின் இந்த ஒற்றை உத்தரவில் RTO அலுவலக ஊழியர்களும், அங்கே வட்டமடித்துக் கொண்டிருந்த இடைத்தரகர்களும் அப்படியே உறைந்தனர்.
பொதுமக்களுக்கு ஓட்டுநர் உரிமம் (Driving License), வாகனப் பதிவு (RC Book), தகுதிச் சான்று (FC) போன்ற அத்தியாவசியச் சேவைகளை வழங்க, மேசைகளுக்கு அடியில் பாய்ந்த லஞ்சப் பணப் பரிவர்த்தனைகளை பறிமுதல் செய்வதுதான் இந்த சோதனையின் முக்கிய நோக்கம்.
சோதனையின் முடிவில் ரொக்கமாகக் கொடுத்தால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்த அதிகாரிகள், இப்போது ‘ஜிபே’ (G-Pay) மூலமாக டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்கத் தொடங்கியுள்ளனராம். இதனால் நாம் பிடிபட மாட்டோம் என நிம்மதி பெருமூச்சு விட்ட அதிகாரிகளின் போனையும் அதிகாரிகள் செக் செய்தனர்.
நேற்றைய ஒரே நாள் சோதனையில் கணக்கில் வராத ரூ.31,85,700 ரொக்கப் பணம் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டது. இதுமட்டுமன்றி, ஆன்லைன் பரிவர்த்தனைகளைத் தோண்டியபோது, ‘ஜிபே’ மூலமாக மட்டுமே ரூ.5,95,468 லஞ்சப் பணம் கைமாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளை அதிர வைத்துள்ளது.
காரைக்குடியில் உள்ள ஆர்டிஓ அலுவலகம்தான் டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்கியதில் டாப் என தெரிகிறது. மொபைல் செயலிகள் மூலம் ரூ 2.50 லட்சம் வசூல் செய்திருந்தனராம்.
அது போல் ரொக்கமாக பணம் பெற்றதில் மயிலாடுதுறை RTO அலுவலகம்தான் டாப்! இங்கு கணக்கில் வராத ரூ.1,75,730 ரொக்கம் சிக்கியது.
ஆலங்குடி ஆர்டிஓ அலுவலகங்களில் ஜிபே மூலம் ₹1.55 லட்சமும், ரொக்கமாக ₹3,000-மும் பறிமுதல் செய்யப்பட்டது.
எங்கெல்லாம் சிக்கியது லஞ்சம்?
காரைக்குடிக்கு அடுத்தபடியாக, திருப்பத்தூரில் ₹88,580-மும், செங்கல்பட்டில் ₹98,688-மும், ஆலங்குடியில் ₹1,55,850-மும், பெருந்துறையில் ₹2,400-மும் கூகுள் பே கணக்குகளின் வழியே லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சோதனை நடந்த 40 இடங்களிலும் பல லட்ச ரூபாய் கணக்கில் வராமல் பிடிபட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் பாயத் தொடங்கியுள்ளன.
முதல்வர் விஜய் அரசு பொறுப்பேற்றதும் கோவில்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் துறை ரீதியான சோதனைகள் நடத்தப்படுகிறது. லஞ்சம் ஒழிந்தால்தான் தமிழக அரசு கடன் வாங்காமல் காலத்தை தள்ள முடியும் என்பது விஜய்யின் கணக்காக உள்ளது. ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாவிட்டாலும் படிப்படியாக ஒழிக்கும் முயற்சியில் விஜய் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

