82 வயதிலும் ஓய்வில்லை!! தினமும் 12 மணி நேரம் உழைப்பு!! இணையத்தை கலக்கும் மன்சுக் தாத்தா!!
மும்பையைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவரின் அயராத உழைப்பு தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது சில விஷயங்களும் சில நபர்களும் வைரலாகிவிடுவார்கள். இவ்வாறு பிரபலமடைவதால் பலருக்கும் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுகிறது. அப்படி தான் 82 வயது முதியவரின் வாழ்க்கை இன்ஸ்டா வீடியோவால் மாற தொடங்கியிருக்கிறது.
மன்சுக் காகா (Mansukh Kaka) என்பவர் 82 வயதாகும் முதியவர், மும்பையை சேர்ந்தவர். தெருவோரம் ஒரு சிறிய தள்ளுவண்டியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளை விற்று வருகிறார். மன்சுக் காகா தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு புடவைக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்தவர். ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால் அவரது வேலை பறிபோனது. அவரை பார்த்து கொள்வதற்காக அவருடைய மகனும் தனது வேலையை விட வேண்டியதாயிற்று.

இந்நிலையில் உடல்நலம் தேறிய பிறகு, குடும்பத்திற்குப் பாரமாக இருக்க விரும்பாத காகா, யாரிடமும் கையேந்தாமல் சொந்தமாக உழைக்க முடிவு செய்து தனது வீட்டின் அருகிலேயே ஒரு சிறிய சாலையோரக் கடையைத் தொடங்கினார். தினமும் காலையிலிருந்து இரவு வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் கடை திறந்து வைத்து வியாபாரம் செய்கிறார். ஆனால், இவ்வளவு கடினமாக உழைத்தும் ஒரு நாளைக்கு அவருக்குக் கிடைக்கும் சராசரி வருமானம் வெறும் 300 ரூபாய் மட்டுமே.
இந்தக் கடையில் விற்கப்படும் அனைத்துப் பலகாரங்களையும் மன்சுக் காகாவின் சகோதரி வீட்டிலேயே சுத்தமாகத் தயாரித்துக் கொடுக்கிறார். அதை இவரே அழகாகப் பேக் செய்து கொண்டு வந்து விற்கிறார். ஆராதனா சட்டர்ஜி என்ற இன்ஸ்டாகிராம் Content Creator சாலையோரம் கடை அமைத்து பலகாரங்களை அடுக்கிக் கொண்டிருந்த இந்த முதியவரைக் கண்டு, அவரிடம் பேசி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோ இணைப்பு (https://www.instagram.com/reel/DZmuIoWPZNx/?utm_source=ig_web_button_share_sheet)
இன்ஸ்டாவில் இந்த வீடியோ தான் இப்போது வைரலாக இருக்கிறது. 82 வயதிலும் மன்சுக் காகா காட்டும் அர்ப்பணிப்பும், ஒரு நாளைக்கு வரும் மிகக் குறைந்த வருமானம் மற்றும் செலவுகளைக் கூட ஒரு சிறிய டைரியில் எழுதி வைக்கும் அவரது ஒழுக்கமும் பலரையும் வியக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் அவரது கடையை தேடிச் சென்று பலகாரங்களை வாங்கி ஆதரவு தந்து வருகின்றனர். வறுமையிலும் சுயமரியாதையோடு வாழ நினைக்கும் இந்த முதியவரின் உழைப்பு, கடினமான சூழ்நிலையிலும் எப்படி துணிவோடு வாழ வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 82 வயது முதியவரே உழைக்கும் போது நமக்கென்ன நாமும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் பலருக்கும் கிடைத்துள்ளது.

