Last Updated:
இலவச பேருந்து திட்டம் காரணமாக கர்நாடக கிராமப்புறப் பெண்களின் வேலைவாய்ப்பில் சில குறிப்பிடதக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா கேரளா ஆகிய மூன்றிலும் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா அரசின் ‘சக்தி’ திட்டம், தமிழ்நாடு அரசின் விடியல் பயணம் திட்டம், கேரள அரசின் ‘பிரியதர்ஷினி’ என இந்த மூன்று திட்டங்களும் மேலோட்டமாக ஒன்றுபோலத் தோன்றினாலும், அவற்றின் செயல்பாடுகளில் சில ஒற்றுமைகளும் பல வேறுபாடுகளும் காணப்படுகின்றன.
கர்நாடகாவைப் பொறுத்த வரையில், 2023-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. மேலும், பயனர்கள் தங்களின் இருப்பிடத்தை உறுதிப்படுத்த ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகிய அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்பட அடையாள அட்டையைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும். இதிட்டத்திற்கென பிரத்யோக சக்தி ஸ்மார்ட் கார்டு வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு, கேரள அரசுகளின் திட்டங்களில் இருப்பிடக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. மேலும், பயனர்கள் அடையாள அட்டை எதையும் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாடு கேரளாவில் ஆவணங்ககளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதால், பயனாளர்களின் வயது, பாலினம், இருப்பிடம் அளவிலான தரவுகளை துல்லியமாகச் சேகரிப்பதில் அரசுக்கு சிக்கல் உள்ளது. ஆனால், கர்நாடகாவில் ‘சக்தி கார்டுகள்’ மூலம் இந்தத் தரவுகளை அரசு எளிதாகச் சேகரிக்க முடியும். தரவுகள் அடிப்படையிலான அடுத்தக்கட்ட கொள்கைகளை வகுக்க முடியும். இருப்பினும், எந்தவித சட்ட ஆவணங்களும் இல்லாத விளிம்புநிலை பெண்களுக்கு இது கூடுதல் சுமையை உருவாக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
கர்நாடகாவில் 26,054 பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்டுகிறது. நாளொன்றுக்கு சுமார் ரூ. 19 கோடி அவ்வரசு செலவிடுகிறது. தமிழ்நாட்டில் 7,712 பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, தினமும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைகின்றனர். நாளொன்றுக்கு ரூ.10 கோடி அரசு செலவிடுகிறது. கேரளாவில் 3,125 பேருந்துகளில் மட்டும் செயல்படும் இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஆண்களுக்குப் பாகுபாடு காட்டுவதாகக் கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் இத்திட்டத்திற்கு எதிராகப் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இலவச பேருந்து திட்டம் காரணமாக கர்நாடக கிராமப்புறப் பெண்களின் வேலைவாய்ப்பில் சில குறிப்பிடதக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (Fare play: How Karnataka’s Shakti is changing women’s work) குறிப்பாக, இதுவரை பயணப்படாத பகுதிகளுக்கு சென்று புதிய வேலைவாய்ப்பினை தேடுவதற்கும், இருக்கும் வேலையைத் தக்கவைப்பதற்க்கும் இத்திட்டம் முக்கிய கருவியாக அமைவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்தின் வாயிலாக மாதம் ரூ. 400-க்கும் மேல் சேமிப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சேமிப்பு பணம் முழுவதும் குடும்பத்தின் உணவு, கல்வி, மருத்துவத் தேவைகளுக்காகவே செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். விடியல் பயணம் காரணமாக பொதுவெளியில் பெண்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பாலினச் சமத்துவத்திற்கு பெரிய அளவில் உதவுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


