Last Updated:
பல பயிர் சாகுபடியில் மாதந்தோறும் நிலையான வருமானம் ஈட்டும் விழுப்புரம் விவசாயி.
“ஒரே நிலத்தில் ஒரே பயிரை மட்டும் சாகுபடி செய்வது அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பதற்கு சமம். ஒரு பயிர் பாதிக்கப்பட்டாலும், மற்றொரு பயிர் விவசாயியைக் காப்பாற்ற வேண்டும்” என்ற நோக்கத்துடன் பல பயிர் சாகுபடி முறையில் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்.
விழுப்புரம் மாவட்டம் சித்தாத்தூர்திருக்கை கிராமத்தைச் சேர்ந்த வினோத், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இரண்டரை ஏக்கர் சொந்த நிலத்தில் கத்தரி, வெண்டை, கொத்தவரை, மிளகாய், சாமந்திப்பூ, புளிச்சக்கீரை உள்ளிட்ட பல்வேறு காய்கறி மற்றும் மலர் பயிர்களை ஒருங்கிணைந்த முறையில் சாகுபடி செய்து நிலையான வருமானம் ஈட்டி வருகிறார்.
தோட்டக்கலைத் துறை வழங்கும் அரசு மானியத் திட்டங்களை பயனுள்ளதாக பயன்படுத்தியுள்ள வினோத், கொடிவகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பசுமைக்குடில் மற்றும் கல்தூண் அமைப்புகளை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் பயிர்களின் வளர்ச்சி மேம்பட்டு, மகசூலும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
வயலில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பிற விளைபொருட்களை உள்ளூர் சந்தைகளில் மட்டுமின்றி, உழவர் சந்தைகள், மொத்த விற்பனை மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் சந்தை வாய்ப்புகள் விரிவடைந்து, கூடுதல் வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி வினோத் கூறுகையில், “விவசாயிகள் ஒரே பயிரை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. இயற்கை சீற்றம், நோய் தாக்குதல் அல்லது சந்தை விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஒரு பயிர் பாதிக்கப்பட்டாலும், மற்ற பயிர்கள் வருமானத்தை உறுதி செய்யும். சிறு விவசாயிகளாக இருந்தாலும், பெரிய அளவில் விவசாயம் செய்பவர்களாக இருந்தாலும், பல பயிர் சாகுபடி முறையை பின்பற்றுவது பாதுகாப்பானது. தற்போது என் வயலில் வெண்டை, கத்தரி, புடலை, கொத்தவரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. தினசரி விற்பனை மூலம் அன்றாட செலவுகள் பூர்த்தியாகுவதுடன், மாதந்தோறும் நிலையான வருமானமும் கிடைத்து வருகிறது” என்றார்.
விவசாயத்தை வெறும் பிழைப்புக்கான தொழிலாக அல்லாமல், திட்டமிட்ட வணிகமாக மாற்றும் முயற்சியில் பல பயிர் சாகுபடி முக்கிய பங்காற்றுகிறது. இது மண்ணின் வளத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. பாரம்பரிய விவசாய அறிவையும், நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து வெற்றிகரமாக விவசாயம் செய்து வரும் வினோத், பல பயிர் சாகுபடி முறையின் மூலம் மற்ற விவசாயிகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

