Last Updated:
ஷுப்மன் கில் 102 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்கள் விளாசினார். இதில் 22 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.
அதிகமுறை 400க்கும் அதிகமான ரன்கள் எடுத்த அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி கிரிக்கெட்டில் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-ஆவது போட்டி இன்று லக்னோவில் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 50 ஓவர்களில் 369 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது (டக்வொர்த் லீவிஸ் அடிப்படையில் இலக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது).
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் மூத்த வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். எனினும், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 9 ரன்களிலும், அதிரடியாக விளையாட முயன்ற ரோஹித் சர்மா 39 பந்துகளில் 48 ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா 96 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறிய போது, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்ட இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு ரிக்கார்ட் பிரேக்கிங் பார்ட்னர்ஷிப்பாக 224 ரன்களைக் குவித்தது. கேப்டன் பொறுப்புடன் விளையாடிய ஷுப்மன் கில் 102 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்கள் விளாசினார். இதில் 22 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். மறுபுறம் இடதுகை ஆட்டக்காரரான இஷான் கிஷன் டி20 ஸ்டைலில் அதிரடியைத் தொடங்கி, வெறும் 79 பந்துகளில் 125 ரன்கள் குவித்து மிரட்டினார்.
இவரது அதிரடி இன்னிங்ஸில் 14 பவுண்டரிகளும் 7 பிரம்மாண்ட சிக்ஸர்களும் பறந்தன. இந்த ஜோடியின் ஆட்டத்தால் இந்தியாவின் ஸ்கோர் 350 ரன்களைத் தாண்டியது.
இஷான் கிஷன் மற்றும் கில் ஜோடி ஆட்டமிழந்த பிறகு, இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை அடுத்தடுத்து சரிந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களில் வெளியேற, கே.எல். ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் (0) ஏமாற்றினார். வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களும், அறிமுக வீரர்களான குர்னூர் ப்ரார் 3 ரன்களும், பிரின்ஸ் யாதவ் 5 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இறுதி கட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 3 ரன்களில் அவுட்டானார். எனினும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 ரன்கள் எடுக்க, இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் 400க்கும் அதிகமான ரன்களை அதிகமுறை எடுத்த அணி என்ற சாதனையை இந்திய அணி ஏற்படுத்தியுள்ளது.


