கால்பந்தின் உலகளாவிய திருவிழா… எல்லைகளையும், அரசியலையும், கலாச்சாரப் பிரிவினைகளையும் கடந்து நிற்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஜூன் 11 அன்று அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 2026 FIFA உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியபோது, கால்பந்தின் இந்த ஆன்மாதான் பறைசாற்றப்பட்டது.
ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, மைதானத்தில் அரங்கேறும் சிலிர்ப்பூட்டும் தருணங்களைவிட, அமெரிக்காவில் நிகழும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்தான் உலகையே உலுக்கி வருகின்றன. விசா மறுப்புகள், நுழைவுத் தடைகள், பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தீவிர சோதனைகள் என, கொண்டாட்டமாகத் தொடங்கிய உலகக் கோப்பை, அமெரிக்காவில் சர்ச்சைகளின் கூடாரமாக மாறியுள்ளது.
குடிவரவு முடிவுகள் போட்டியை நடத்தும் நாடுகளின் இறையாண்மைக்கு உட்பட்டவை என FIFA மீண்டும் மீண்டும் கூறிவந்தாலும், புவிசார் அரசியல் பதற்றங்களும், அமெரிக்காவின் கடுமையான குடிவரவுக் கொள்கைகளும் இந்தப் போட்டியின் மீது கரிய நிழலைப் படரச் செய்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவருமே இதன் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

வரலாறு படைக்கவிருந்த நடுவருக்குத் தடை
உலகக் கோப்பையில் பணியாற்றும் முதல் சோமாலிய நடுவர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தவிருந்தவர் உமர் அப்துல்காதிர் ஆர்டன். 2025-ஆம் ஆண்டின் ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், முறையான விசா மற்றும் அனைத்து ஆவணங்களுடன் மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

ஆனால், “பாதுகாப்பு ஆய்வில் கவலைக்குரிய அம்சங்கள்” இருப்பதாகக் கூறி, அமெரிக்க அதிகாரிகள் அவரை நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகப் பின்னர் குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஆர்டன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உலகக் கோப்பை கனவு சிதைக்கப்பட்டாலும், FIFA அவருக்குப் போட்டி சம்பளத்தை முழுமையாக வழங்கும் என அறிவித்துள்ளது. பின்னர், ஆகஸ்ட் மாதம் நடக்கும் UEFA சூப்பர் கோப்பை போட்டிக்கு நடுவராகப் பணியாற்ற UEFA அவரை நியமித்தது.

