Last Updated:
வீரர்கள் தங்களது கவனத்தை விளையாட்டில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணியின் 15 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), இலங்கை ‘ஏ’ அணி வீரர்களுடன் மைதானத்தில் நேரடியாக மோதலில் ஈடுபட்டது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரில் 776 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த சூர்யவன்ஷியை, இலங்கை வீரர்கள் வம்புக்கு இழுத்து ஆத்திரமூட்டிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. குறிப்பாக, இலங்கை வீரர் விஷென் ஹலம்பகே இதில் முக்கியப் பங்கு வகித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி அவரைப் பிடித்துத் தள்ளியதால் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சூர்யவன்ஷியை வம்புக்கு இழுத்த விஷென் ஹலம்பகே உள்ளிட்ட இலங்கை வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அபராதம் மற்றும் தடைகளை விதித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகளின்படி மைதானத்தில் வீரர்களுக்கு இடையே ஏற்படும் உடலளவிலான மோதல்கள் கடுமையான குற்றமாகக் கருதப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சூர்யவன்ஷி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து பேட்டியளித்த பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, சூர்யவன்ஷி மீது தற்போதைக்கு எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். வீரர்கள் தங்களது கவனத்தை விளையாட்டில் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், இத்தகைய புறக் காரணங்களால் அவர்கள் திசைதிருப்பப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


