ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே, தன்னிடம் உள்ள அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“ஒரு முன்னாள் உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரி என்ற ரீதியில், தனக்குத் தெரிந்த தகவல்களை மறைத்து வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஈஸ்டர் தாக்குதல் குறித்த முழுமையான உண்மைகளை வெளிப்படுத்தி, பாதுகாப்புப் பிரிவினருக்கு ஆதரவளிப்பதே அவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியமாகும். விசாரணையாளர்களை மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஒத்துழைப்பு வழங்கி, தரவுகளைப் பகிர்ந்துகொள்வதிலேயே அவர் கவனம் செலுத்த வேண்டும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், “அவர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் உள்ள ஏனைய கைதிகளுக்குப் பயன்படுத்தப்படும் நிலையான நடைமுறைகளின் கீழேயே வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்தவொரு சிறப்பு அறையோ அல்லது சலுகைகளோ வழங்கப்படவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், அவருக்குத் தேவையான மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து உணவு வழங்கவும், தேவைப்படும் போது தாமதமின்றி மருத்துவக் கவனத்தைப் பெறவும் அதிகாரிகள் தொடர்ந்து அனுமதி அளித்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

