Business
oi-Prasanna Venkatesh
அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா நிறுவனத்தின் பெரிய அளவிலான டீமெர்ஜர் திட்டத்தை செயல்படுத்தி நேற்று புதிய நிறுவனங்கள் தனித்தனியாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
இந்த நான்கு புதிய நிறுவனங்களை தனியாக பிரித்து பட்டியலிடப்பட்டது மூலம், பங்குதாரர்களின் முதலீட்டு மதிப்பு உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் வேதாந்தா குழுமத்தின் மதிப்பும் சுமார் 63,500 கோடி ரூபாய் உயர்ந்து அனில் அகர்வாலுக்கு ஆனந்த கண்ணீர் வரவழைத்துள்ளது. இது இரண்டு மாதங்களுக்குள் 22.5 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. ஆனால் அடுத்த 24 மணிநேரத்தில் மொத்த கதையும் மாறியது.

இன்றைய நிலைமை என்ன..?
இன்றைய வர்த்தகத்தில் வேதாந்தா லிமிடெட் பங்குகள் சுமார் 1 சதவீதம் குறைந்து 299 ரூபாய்க்கும், வேதாந்தா அலுமினியம் மெட்டல் 5 சதவீதம் குறைந்து 475 ரூபாய்க்கும், வேதாந்தா பவர் 0.12 சதவீதம் குறைந்து 40.90 ரூபாய்க்கும், வேதாந்தா ஆயில் & கேஸ் பங்குகள் 5 சதவீதம் குறைந்து 35.20 ரூபாய் என்ற விலையிலும், வேதாந்தா அயன் & ஸ்டீல் மட்டும் 5 சதவீதம் உயர்ந்து 22.10 ரூபாய்க்கு உயர்வில் வர்த்தகமாகிறது.
இந்த சரிவை பார்க்கும் போது இந்நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டாளர்கள் லாபத்தை பணமாக்க முடிவு செய்ததின் விளைவாக பார்க்கப்படுகிறது.
வேதாந்தா டீமெர்ஜர்..
டீமெர்ஜர் என்பது ஒரு நிறுவனத்தை இரண்டு அல்லது பல தனித்தனி நிறுவனங்களாக பிரிப்பதாகும். வேதாந்தா நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் தனது அலுமினியம், மின்சாரம், எண்ணெய் & எரிவாயு மற்றும் இரும்பு & எஃகு ஆகிய தொழில் பிரிவுகளை தனித்தனி நிறுவனங்களாக பிரித்து தனித்தனியாக நிர்வாகம் செய்ய உள்ளது.
வேதாந்தா லிமிடெட் தனது வணிகங்களை பிரித்து நான்கு புதிய நிறுவனங்களை உருவாக்கி நேற்று பட்டியலிட்டது. இந்த டீமெர்ஜர் நடவடிக்கை, மூலம் பல்வேறு தொழில்களை ஒரே குடையின் கீழ் வைத்திருந்ததால் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருந்தால் மதிப்பீடு முழுமையாக பெற முடியாத நிலை உருவானது.
ஏப்ரல் 29ஆம் தேதி முன், வேதாந்தா லிமிடெட்-ன் மொத்த சந்தை மதிப்பு 3,02,371 கோடி ரூபாயாக இருந்தது. இதன் பின்பு டீமெர்ஜர் திட்டத்தை மே 1, 2026 முதல் அமல்படுத்த முடிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று டீமெர்ஜர் பணிகள் முடிவடைந்து, 4 புதிய நிறுவனங்கள் தனித்தனியாக பட்டியலிட்ட பிறகு, வேதாந்தா லிமிடெட் சேர்த்து ஐந்து தனி நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 3,65,830 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
பங்குதாரர்களுக்கு 22.5% வருமானம்
இந்த மாற்றத்தின் மூலம், பங்குதாரர்கள் 63,500 கோடி ரூபாய் சந்தை மதிப்பு உயர்வை பெற்றுள்ளனர். இதன் மூலம் வேதாந்தா பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் சுமார் 22.5 சதவீத வருமானத்தை இந்த 2 மாதத்திற்குள் பெற்றனர்.
வேதாந்தா குழுமத்தின் 4 புது நிறுவனங்கள்
வேதாந்தா குழுமத்தின் 4 புதிய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட நாளில், வேதாந்தா அலுமினியம் மெட்டல் 527 ரூபாய், வேதாந்தா பவர் 41.30 ரூபாய், வேதாந்தா அயன் & ஸ்டீல் 22 ரூபாய், வேதாந்தா ஆயில் & கேஸ் 39 ரூபாய் என்ற விலையில் தொடங்கின. இவை சேர்ந்து 629.30 ரூபாய் அளவில் இருந்தன.
இதில் வேதாந்தா அலுமினியம் மெட்டல் மட்டும் 2,06,000 கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. வேதாந்தா பவர் 16,149.90 கோடி ரூபாய், வேதாந்தா அயன் & ஸ்டீல் 7,821 கோடி ரூபாய், வேதாந்தா ஆயில் & கேஸ் 14,859.47 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளன. மீதமுள்ள வேதாந்தா லிமிடெட் 1,21,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பில் தொடர்கிறது.

