கோலாலம்பூர்:
சுங்கை பூலோவில் உள்ள நீர் விளையாட்டுப் பூங்கா ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
“பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், பூங்காவில் உள்ள நீச்சல் குளப் (Pool Area) பகுதியை விட்டு வெளியேறிய பின்னர் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மயக்கமடைந்த நிலையில் பலவீனமாகக் காணப்பட்ட அச்சிறுவன், அவசரச் சிகிச்சைக்காக உடனடியாகச் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். எனினும், அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரிகள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்” என்று, சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் (Supt) முகமட் ஹாஃபிஸ் முஹம்மது நூர் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு இச்சம்பவத்தில் எவ்வித குற்றவியல் கூறுகளும் (Criminal Elements) கண்டறியப்படவில்லை என்றும், சிறுவனின் துல்லியமான மரணக் காரணத்தைக் கண்டறியத் தொடர்ந்து புலனாய்வுப் பணிகள் நடந்து வருவதாகவும் முகமட் ஹாஃபிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் விபரங்கள் அறிந்த பொதுமக்கள், இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மது ஜுல் இர்ஃபான் ஒமாரை 017-5393648 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
போலீஸ் விசாரணை முழுமையடையும் வரை, இச்சம்பவம் குறித்துச் சமூக ஊடகங்களில் பொதுமக்கள் யாரும் தங்களது சுய ஊகங்களின் அடிப்படையில் வதந்திகளையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறைத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.




