Last Updated:
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா 57 இன்னிங்ஸ்களுடன் உலக அளவில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கில், இந்த இமாலய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை சுப்மன் கில் மிக எளிதாக முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, தனது 75 ஆவது ஒருநாள் இன்னிங்ஸில் தான் 3000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார். ஆனால், தற்போதைய இந்திய கேப்டன் சுப்மன் கில் வெறும் 62 இன்னிங்ஸ்களிலேயே இச்சாதனையைப் படைத்து, இந்திய அளவில் புதிய சாதனையாளராக உருவெடுத்துள்ளார்.
உலக அளவிலும் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய பேட்ஸ்மேன்களின் வரிசையில் சுப்மன் கில் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய வீரர்களில் இவருக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் 72 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 75 இன்னிங்ஸ்களிலும் இந்த இலக்கை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள் எடுத்த சாதனையாளர்களின் வரிசையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா 57 இன்னிங்ஸ்களுடன் இன்னமும் உலக அளவில் முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் சுப்மன் கில் 62 இன்னிங்ஸ்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷாய் ஹோப், பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பகார் ஜமான் மற்றும் அதே அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ஆகிய மூவருமே தலா 67 இன்னிங்ஸ்களில் இந்த 3000 ரன்கள் என்ற இலக்கை எட்டி அடுத்தடுத்த இடங்களில் இணைந்துள்ளனர்.


