Last Updated:
விசாரணை நிறைவடையும் வரை ஊடகங்களும் பொதுமக்களும் முன்கூட்டியே எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம்
கடந்த 2025 ஜூன் 12 அன்று, அகமதாபாத் சர்தார் வல்லாபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா ஏஐ-171 போயிங் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
இந்தத் துயரமான விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. விமான விபத்து விதிகள் 2017, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளின்படி ஏஏஐபி இந்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட அறிக்கை 2025 ஜூலை 12 அன்று வெளியிடப்பட்டது. கடந்த ஓராண்டாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் விமானத்தின் அமைப்பு, விமானப் பதிவுத் தரவுகள், எஞ்சின் பாகங்கள், பராமரிப்புப் பதிவுகள் போன்ற ஆதாரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணையின் இறுதி அறிக்கை, அனைத்து நடைமுறைகளும் முடிந்தவுடன் விரைவில் வெளியிடப்படும். விபத்து குறித்த விசாரணையின் நோக்கம் விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதே தவிர, எவர் மீதும் குற்றம் சுமத்துவது அல்ல. எனவே விசாரணை நிறைவடையும் வரை ஊடகங்களும் பொதுமக்களும் முன்கூட்டியே எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம் என விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) கேட்டுக்கொண்டுள்ளது.
Jun 12, 2026 10:43 PM IST


