நிதி மோசடி ஒன்றில் இழக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மீளப் பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை எனவும், அந்த சுமையை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கி, திறைசேரி, முதன்மைச் செயலாளர் மற்றும் ஆளுநர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் எமது குழுவில் முன்னிலையாகி அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
பதில் அறிக்கை
அந்த அறிக்கை தொடர்பில் நாம் கலந்துரையாடிய போது, பல சிக்கல்களும் குறைபாடுகளும் வெளிச்சத்திற்கு வந்தன.
இந்த நிலைமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மத்திய வங்கி இதற்குப் பெரும் பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்து அறிக்கையில் காணப்பட்ட போதிலும், மத்திய வங்கி அது குறித்து வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டையே எமக்குத் தெரிவித்தது.
A $2.5 million theft of public funds and the public will have to pay it.
Secretary confirmed: Whatever is not recovered will be on the people.
Outdated email server for years, basic management regulations and internal controls overlooked. Anti-money laundering flags ignored.… pic.twitter.com/PcoKwiTZY2
— Harsha de Silva (@HarshadeSilvaMP) June 10, 2026
அத்துடன், அவர்களுக்கு இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றிருக்காததால், அதனை நாம் இன்று அவர்களிடம் கையளித்தோம். இது குறித்த தங்களது பதில் அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இருப்பினும், இந்த ஒட்டுமொத்த செயற்பாடுகளும் மின்னஞ்சல் ஊடாகவே பரிமாறப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து வருடங்களாக எவ்வித தொழில்நுட்ப ஆதரவும் இல்லாத, காலாவதியான மின்னஞ்சல் சேவையகம் ஒன்றையே இவர்கள் இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது இங்கு தெளிவாகிறது.
சைபர் பாதுகாப்பு இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த காலகட்டத்தில், அரசாங்கத்தின் முதன்மையான நிறுவனம் ஒன்று எவ்வாறு எவ்வித பாதுகாப்பும் இல்லாத ஒரு மின்னஞ்சல் சேவையகத்தைப் பயன்படுத்தியது என்பது பெரியதொரு கேள்வியாக எழுந்துள்ளது.” என தெரிவித்தார்.
ஒரு புதிய பாதீட்டு திட்டம்
இதேவேளை இச்சம்பவத்தில் ஏதேனும் மோசடி நடந்துள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்
“இதுவொரு மிகப்பெரிய திருட்டுச் சம்பவம் என்பதை எனது ஆரம்ப அறிக்கையிலேயே நான் குறிப்பிட்டிருந்தேன்.
இங்கு திருட்டு எதுவும் நடக்கவில்லை என எவரும் வாதிடவில்லை, திருட்டு நடந்துள்ளது என்பது உறுதியானது. ஆனால், இறுதியில் இந்த நிதியை யார் செலுத்தப் போகிறார்கள் என்பதே தற்போதைய கேள்வியாகும்.

இது குறித்து நான் செயலாளரிடம் கேட்டபோது, இந்த பணத்தை மீளப் பெற முடிந்தால் செலுத்த முடியும் என்றும், இல்லையெனில் எஞ்சிய பகுதியை பொதுமக்களே ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், இந்தப் பணத்தை இனி எவ்விதத்திலும் மீளப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, ஒரு புதிய பாதீட்டு திட்டத்தின் ஊடாக இந்த 2.5 மில்லியன் டொலர் நிதியை பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்தே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களமும் காவல்துறையினரும் இணைந்து தடயவியல் தணிக்கை உள்ளிட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

